Saturday, 13 February 2021

வளன் எனும் மௌனப் புரட்சியாளன்


பல நேரங்களில் பல மனிதர்களை நாம் அவர்களின் அமைதியான போக்கையும் எதை கேட்டாலும் அமைதி சாதிக்கிற குணத்தையும் குறித்து பலவாறு பேசி கிண்டலடித்திருப்போம். ஏன் நம்மில் அவர்களை 'உம்முனா மூஞ்சி,' 'கல்லுடி மங்கன்,' 'பேசா மடந்தை,' என்றெல்லாம் கேளி செய்து விளையாடிருப்போம். ஆனால் அவ்வாறிருப்பது பெருங்குற்றமா என்ன? இதை பற்றி சிந்திக்கையில் நான் பள்ளி பருவத்தில் இருக்கும் போது என்னுடன் செந்தில் என்ற மாணவன் பயின்று வந்தான். அவனும் மேற்கூறிய குணத்தை கொண்டிருந்தான். நான் அவன் முழுவதுமாக இரண்டு வார்த்தை கூட பேசி பயின்ற ஐந்து வருடத்தில் பார்த்ததும் இல்லை அவன் பேசுகிறான் என்று சொல்லக் கேள்விப்பட்டதுமில்லை. ஆனால் அவன் வாய் பேச இயலாதவனும் இல்லை. குருமட விடுமுறை காலங்களில் ஒரு முதல் செவ்வாயன்று புனித அந்தோணியார் ஆலயத்திற்கு செல்வது என் ஆன்மிக பழக்கம். அது போல ஒரு நாள் நான் பேருந்தில் செல்கையில் செந்திலை பேருந்தின் மறுமுனையில் பார்த்தேன். பேருந்து கூட்ட நெரிசல் இல்லாத போதிலும் எனக்குள் ஒரு தயக்கம் 'எங்கடா இவன் நம்மை யார் நீ என்று கேட்டுவிடுவானோ,' என்ற தயக்கத்தில் கேட்கவில்லை. என் வழித்தடம் வந்ததும் நான் இறங்கினேன். பின்னர் என் பள்ளி நண்பர்களிடத்தில் விசாரித்த போது தான் தெரிந்தது அவன் பெரிய பத்திரிக்கை நிறுவனத்தில் துணை ஆசிரியராக பணியாற்றுகிறான் என்று. மிகவும் ஆச்சரியமாக இருந்தாலும் மனதில் மகிழ்ச்சி பொங்கிற்று.லௌ ட்சு சொல்வது போல 'அமைதியே ஆற்றலின் ஊற்று' என்பது செந்தில் விடயத்தில் சரியானது. 


இந்த நிகழ்வினை சிந்திக்கையில்தான் புனித வளனாரைப் பற்றிய இந்த தலைப்பு என் எளிய அறிவில் உதித்தது. வளன் எனும் மௌப் புரட்சியாளன் என்ற தலைப்ர்தான் அது. இயேசு முழு மனிதராகவும் முழு இறைவனாகவும் இவ்வுலக வாழ்கையை வாழ்ந்தார் என்ற மறைக்கோட்பாட்டை நம்பும் நாம் அவரை மனிதப் புரட்சியாளராகவும் (லூக் 6:27, 9:48, 19:1-10, 22:52—யோவான் 6:32, 8:34, 13:16) நேர்பட பேசுபவராகவும் (மாற்கு 14:30, யோவான் 8:46) விவிலிய நற்செய்திகளில் பார்ப்பது உண்மையாகும். அவருடைய மனித இயல்பு உயிரியல் ரீதியாக புனித யோசேப்பிடமிருந்து வரவில்லையென்றாலும். உளவியல் மற்றும் மனித வளர்ப்பு ரீதியில் வெகுவாகவே உள்வாங்கப்பட்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. மத்தேயு வளனாரை நேர்மையாளர் என்று அதிகாரம் 1:19 ல் குறிப்பிடுகிறார். விவிலியத்தில் பல இடங்களில் இந்த நேர்மை என்னும் குணம் நம்பகத்தன்மையையும் பொய்யுரையாமையையும், நன்னடத்தையையும், நீதியையும், சரியானதை செய்வதையும், விவேகத்தையும், ஊக்கத்தையும் முக்கியமாக உழைப்பையும் குறிக்கிறது. வளனார் உழைக்கும் வர்க்கத்திற்கு பாதுகாவலர் என்பதை திருஅவை கணக்கச்சிதமாக தந்திருப்பது முற்றிலும் சரியே.0020இந்த அனைத்து குணங்களையும் நாம் இயேசுவின் வாழ்விலும் பார்த்திருக்கிறோம். இயேசுவுக்கு இத்தகைய மனித நற்குணங்கள் வருவதற்கு முக்கிய காரணமாக யோசேப்பு இருந்திருக்கிறார் என்பதில் ஒரு துளியும் ஐயமில்லை. ஆகையால் தான் யோசேப்பு இயேசுவின் மனித வளர்ச்சியின் முதுகெலும்பாய் இருக்கிறார். கடவுள் நேர்மையாளரோடு உறவு கொள்கின்றார் (நீதி 3:32) என்பது இதன் மூலம் பளிச்சென்று தெரிகின்றது. தனது இளம் வயது முதலே இயேசு திருமறையை கற்றுத் தேர்ந்தார். ஆகவேதான் தனது வழிதடத்தை இறைவார்த்தையை சரியாக கடைபிடித்து (நீதி 8: 8 என்  வார்த்தையெல்லாம் நேர்மையானவை) வாழும் புனித யோசேப்போடு அமைத்துக்கொள்ள தந்தை கடவுள் பணித்தார். இறைவார்த்தையின் முழுமையாக இவ்வுலகிற்கு வந்த இயேசு நேரிய வழியைக் திருவாய் மொழிந்திட சரியான புரிதலை வழங்கினார் வளனார். அத்தகைய நேர்தையாளரான இயேசுவின் வழி வாழ்வை தந்தது. (நீதி 12:28) என்னதான் வளனார் விவிலயம் முழுவதும் மௌனம் சாதித்தாலும் மீட்பின் புரட்சியில் இறை எனும் நீரைத் தாங்கி வரும் மரியெனும் ஆறு மனிதத்தை சென்றடைய மடை எனும் வாசல் திறந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை (மத் 1:24).


எனினும் இவரது மௌனத்திலும் நேர்மையான குணத்திலும் எங்கு புரட்சி வெடிக்கிறது என்று தெளிவுற நோக்குவது அவசியம். முதலில் புரட்சி என்றால் என்ன என்பதை சிறிது அலசிப்பார்த்துவிட்டு பின் வளனாரின் புரட்சியைப் பற்றி பேசுவது சாலச் சிறந்தது. புரட்சி என்றால் என்ன என்பதற்கு தந்தை பெரியார் அளிக்கும் விளக்கம் பொருத்தமானதாக இருக்கக் கூடும். விடுதலை என்ற இதழில் 'புரட்சி என்றால் என்ன?' என்ற தலைப்பில் அவர் கூறியிருப்பது போல 'ஒரு விஷயம் அதன் பழக்க வழக்க நிலையில் இருந்து மாற்றம் அடைவதும் அதிலும் அது அடியோடு தலை கீழ் நிலை அடையும் படி மாற்றமடைவதுமேதான் புரட்சி என்று சொல்லப்படுவ தாகும்.' அவரது கூற்றின்படி நாம் செய்கின்ற செயல் சமூக மற்றும் உளவியல் ரீதியாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. நமது முடிவுகளை நாம் சுயமாக பல நேரங்களில் எடுப்பதில்லை. சமூகத்தின் பார்வையிலிருந்தே முடிவெடுக்கிறோம். இன்று நிகழ்ந்து வரும் சாதிய இன மத படுகொலைகளே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆகையால் அவ்வாறான கட்டமைப்புகளை உடைத்தெறியக் கூடிய எந்த ஒரு செயலுமே புரட்சிதான் என்பது பெரியாரின் திண்ணமான கருத்தியல். 

யூத சட்டங்களும் மேற்கூறிய கட்டமைப்புகளை மிக வலுவாகவும் விரிவாகவே கட்டி பட்டயம் தீட்டியிருந்ததை நாம் அறிவோம். அதிலும் பெண்கள் குழந்தைகளை ஒரு பொருட்டாக கூட எண்ணாத மதிகெட்ட சமூகமாக திகழ்ந்து வந்த அந்த காலகட்டத்தில் திருமணம் ஆவதற்கு முன்பே கர்பவதியான பெண்ணை ஊரே ஒன்று கூடி கல்லால் எரிந்து கொல்ல வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இதன் மத்தியில்தான் கடவுளின் மீட்புத் திட்டம் வேண்டுமென்றே மரியாளை தூய ஆவியாரால் கருத்தரிக்கச் செய்ததன் மூலம் பூதாகர புரட்சியாக உருவெடுக்கிறது. அந்த புரட்சியின் ஒரு முனை மரியாளாகவும் மறுமுனை சூசையாகவும் இருக்கவே சமநிலை தவறாது பயணித்து இயேசு எனும் அச்சானியின் மையத்தில் சுழன்று கொண்டிருக்கிறது. வெடித்து சிதறுவதற்கு முன் ஆற்றல் மிகுந்த வெடிகுண்டுக்கும் அமைதியின் காலக் கோடு


விதிக்கப்பட்டிருக்கும். அவ்வாறாக இயேசு என்னும் வெடிகுண்டின் தயாரிப்புக் காலத்தின் நேரக் காப்பாளர் வளனார் என்றே சொல்லலாம். தகுந்த தயாரிப்பு இல்லாத எந்த மனித செயல்பாடும் நிச்சயம் தோற்றுபோகும். தனது தந்தைக்கு கீழ்படிந்து நல்ல மனிதனாக தன்னை தயாரிப்பதில் இயேசுவுக்கு வழிகாட்டிய வளனார் அவரது புரட்சியில் பெரும் பங்கு வகித்ததன் மூலம் தானும் ஒரு புரட்சியாளன் என்பதை வெளிக்காட்டியிருக்கிறார். எனவே அமைதியின் அரசராம் இயேசுவின் வளர்ப்புத் தந்தை நமது வளன் எனும் மௌன புரட்சியாளன்