Showing posts with label Trees. Show all posts
Showing posts with label Trees. Show all posts

Monday, 3 March 2025

இயேசு மரம் - விவிலியத்தில் மரங்கள்

 விவிலியத்தில் மரங்கள்

இறைவனையும் இறைமக்களையும் தவிர விவிலியத்தில் உயிர் வாழ்வனவற்றுள் மரங்களே அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளன. விவிலியத்திலுள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரத்துடனும் தொடர்புடையதாக உள்ளது. பழைய ஏற்பாட்டில் இறைவாக்குரைக்கப்பட்டது போல் இயேசுவும் ஒரு மரத்தில்தான் அறையப்பட்டுதான் இறந்தார். இயேசுவைப் போலவே மரங்களும் பெற்றுக்கொள்வதைவிட அதிகமாகவே கொடுக்கின்றன.


கிறித்தவத்தில் மரங்கள் மாண்புமிக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன, அவை விவிலிய கதைகளோடும், படிப்பினைகளோடும் அடையாளங்களோடும் பின்னிப்பிணைந்துள்ளன. படைப்பின் தொடக்கத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் படிப்பினைகள் வரை, விவிலியத்தில் உள்ள மரங்கள் ஆழமான ஆன்மீக உண்மைகளை அடையாளப்படுத்துகின்றன. மேலும் இந்த விவிலிய மரங்கள் இறை நம்பிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க பாடங்களை வழங்குகின்றன.


படைப்பும் மரங்களும்

தொடக்க நூலில்தான் முதல் முதலாக மரங்களைப் பற்றிய குறிப்பு புலப்படுகிறது. 'ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.' (தொநூ 2:9) 

தொடக்க நூலில் இறைவன் மரங்களைப் படைத்ததன் வழியாக கடவுளின் ஞானத்திற்கும் படைப்பாற்றலுக்கும் முன்னேற்பாட்டிற்கும் ஒரு சான்றாக திகழ்கிறது. பசுமையான தாவரங்களும் அடர்ந்த மரங்களும் 'நல்லவை' என்று விவரிக்கப்படுகின்றன. இது மனிதகுலத்திற்கும் கடவுளுக்கும் இடையிலான இணக்கமான உறவின் பின்னணியை உருவாக்குகிறது. படைப்பின் மீது கடவுள் அருளும் ஏராளமான ஆசிர்வாதங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வாழ்வையும், வளர்ச்சியையும், செழுமையையும் குறித்துக் காட்டுகின்றன. கடவுளின் நுணுக்கமான வடிவமைப்பையும், படைக்கப்பட்ட உலகில் மனிதர்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்ற இறைவிருப்பத்தையும் நம்பிக்கையாளர்களுக்கு அவை நினைவூட்டுகின்றன.


தொடக்கத்திலிருந்த இரு மரங்கள்

தொடக்க நூலில் ஏதேன் தோட்டத்தில் வாழ்வின் மரமும் நன்மை தீமையை அறிவதற்கு ஏதுவான மரமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. வாழ்வின் மரம் கடவுளுடனான என்றுமுள ஒன்றிப்பையும் நிலைவாழ்வையும் குறிக்கிறது. இருப்பினும், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரமானது கடவுளுக்குக் கீழ்படிதல்-கீழ்படியாமை ஆகிய இரண்டிற்கும் இடையேயான தெரிவை முன்வைக்கிறது. இரண்டு மரங்களும் மனிதர் உண்பதற்கு தடை செய்யப்பட்டதாய் இருந்தன. ஆனால் விலக்கப்பட்ட அம்மரத்தின் கனிகளை உண்ண வேண்டும் என்று மனிதர் எடுத்த முடிவே அவர்களை கடவுளை விட்டு பிரித்தது. இந்த மரங்கள் கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தையும், பாவத்தின் விளைவுகளையும், இயேசு கிறிஸ்துவின் வழியாக மனித இனத்திற்கு மீட்பின் தேவையையும் சுட்டிக்காட்டுகின்றன.


இயேசுவும் மரங்களும்

இயேசு தன் வாழ்நாளிலும் பணி வாழ்விலும் ஆன்மிக உண்மைகளை வெளிப்படுத்த மரங்களையும் இயற்கையையும் அடிக்கடி பயன்படுத்தினார். உதாரணமாக, இறைநம்பிக்கையின் ஆற்றலை கடுகு விதை வாயிலாக கூறி அது பெருவிருட்சமாக வளர தன்னகத்தே கொண்டிருந்த திறனையும் வலியுறுத்தினார். நம்பிக்கைக் கொண்டு பலன்தரும் வாழ்வு வாழ்வதைக் கற்றுக்கொடுக்க இயேசு பயன்படுத்திய அத்தி மரம் கனிதரும் ஆன்மிகத்துக்கும் உண்மையான சீடத்துவத்துக்குமான ஆற்றலுள்ள அடையாளமாக அமைந்தது. இயேசு அறையப்பட்ட மரத்தாலான சிலுவை பெரும்பாலும் 'சிலுவை மரம்' என்றே வழங்கப்பட்டு வருவது கண்கூடு. இதுவே மனிதகுல மீட்பின் வழியாக அருளப்பட்ட இறையன்பின் உச்சகட்ட வெளிப்பாடு.

பல உவமைகளில், முக்கியமான செய்திகளை வெளிப்படுத்த இயேசு மரங்ளை உருவகங்களாகப் பயன்படுத்தினார். விதைப்பவரையும், விதைகளையும் பற்றிய உவமையில் ஏற்றுக்கொள்ளும் இதயம் வளமான மண்ணுடன் ஒப்பிடப்படுகிறது, அங்கு (கடவுளின் வார்த்தையைக் குறிக்கும்) விதை வேரூன்றி, ஏராளமான அறுவடையை அளிக்கிறது. திராட்சை செடியும் அதன் கிளைகளையும் பற்றிய உவமையானது ஆன்மிக கனிகளைத் தருவதற்கு உண்மையான திராட்சைச் செடியான இயேசுவுடன் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த உவமைகள் கிறிஸ்தவர்களுக்கு ஆன்மிக ஊட்டம், உறுதிப்பாடு மற்றும் கிறிஸ்துவை சார்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகி;ன்றன. 


சிலுவை எனும் அடையாளம்  

கிறிஸ்தவத்தின் முக்கியமான மைய அடையாளமாக சிலுவை ஒரு மரமாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு மரம் இருப்பிடத்தையும் வாழ்வாதாரத்தையும் வழங்குவது போல் சிலுவை மரமானது இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும், மீட்பையும், மன்னிப்பையும், இறைநல்லிணக்கத்தையும் அடையாளப்படுத்துகிறது. இது இறையன்பையும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நிலைவாழ்வின் எதிர்நோக்காகவும் செயல்பட்டு, இறையருளும் மீட்பும் இணை சேரும் சந்திப்பைக் குறிக்கிறது. 


படைப்பு முதல் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் போதனைகள் வரை, மரங்கள் கிறிஸ்தவத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைக் கொண்டுள்ளன. அவை இறைப்பராமரிப்பு, கீழ்ப்படிதலுக்கும் கீழ்ப்படியாமைக்கும் இடையேயான தேர்வு, சிலுவையில் இயேசுவின் மீட்புப் பணி ஆகியவற்றை அடையாளப்படுத்துகின்றன. விவிலிய மரங்கள் இறைநம்பிக்கை கொண்டோருக்கு நம்பிக்கை, வளர்ச்சி, பலன் அளித்தல் மற்றும் இறையன்பின் ஆற்றல் பற்றிய ஆழமான ஆன்மீக பாடங்களை வழங்குகின்றன. திருவிவிலியத்தில் உள்ள மரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி கிறிஸ்தவர்கள் சிந்திக்கும்போது, கடவுளுடனான தங்கள் உறவை ஆழப்படுத்தவும், தங்கள் வாழ்க்கையில் பலன் தரவும், தங்கள் படைப்பாளரின் ஏராளமான அருளிலும் இரக்கத்திலும் ஆறுதலைக் காணவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


உரோமையர்களுக்கு ஒருவரைக் கொல்ல பல வழிகள் உள்ளன. கத்தியால் குத்தி கொல்லுதல், கல்லெறிந்து கொல்லுதல், உயிருடன் எரித்து கொல்லுதல், நீரில் மூழ்கடித்து கொல்லுதல், கொலோசியம் என்ற உள்ளரங்கத்தில் சிங்கங்களுக்கு இரையாக்கிக் கொல்லுதல் ஆகியவை மரண தண்டனைக்கான வழிகளாகும். ஆனால் இயேசு வேர்களும் கிளைகளும் அகற்றப்பட்ட ஒரு மரத்தில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.