Monday, 27 February 2023

இயேசு மரம் 7 - சீடர்களை அழைத்தல்

 இயேசு மரம் 7

சீடர்களை அழைத்தல்

தவக்காலத்தின் முதல் வார செவ்வாய்


 

விவிலிய வாசகம்: 

இயேசு கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார். உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள். (மாற் 1: 16-20)

இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், 'என்னைப் பின்பற்றி வா' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். (மத் 9:9)

இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார். அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, 'என்னைப் பின்தொடர்ந்து வா' எனக் கூறினார். (யோவா 1:43)

சிந்தனை: 

    இயேசு கரையோரத்திலும் மரத்தடியிலும் இருந்து அழைப்பது போன்ற அடையாளம் நம் வழியாக இறைவன் தனது பணியைச் செய்ய ஆவல் கொண்டுள்ளார் என்பதை நினைவூட்டுகிறது.

    இயேசு பல்வேறு நிலையில் இருப்போரை பல்வேறு தொழில் செய்வோரை பலவிதமாக அழைப்பதை நாம் பார்க்கிறோம். பேதுரு, அந்திரேயா ஆகியோரை கடலில் மீன் பிடிக்கும் போதும், யாக்கோபு, யோவான் ஆகியோரை தங்கள் வலைகளை பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போதும், மத்தேயுவை சுங்கச்சாவடியில் இருந்தும், நத்தானியேலை அத்திமரத்தின் அடியில் அமர்ந்து இறைத்தியானம் செய்யும் போதும் என பலவாறு அழைக்கிறார்.

    இயேசுவுக்கு சீடர்களின் உதவி தேவையா என்ன? நிச்சயம் இல்லை. இயேசு முழு மனிதன் மட்டுமல்ல முழு கடவுளும் ஆவார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவரால் எதையும் செய்து முடிக்க முடியும். இருப்பினும் அவர் சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக செயலாற்றுகிறார். ஏன்? அவர் நம் வழியாகவும் செயலாற்றுகிறார்.

    எவ்வாறு கடவுள் நம் வழியாக செயலாற்ற இயலும்? நாம் சிறியவர்கள் குறையுள்ளவர்கள் அல்லவா? அவ்வாறிருப்பின் சீடர்களும் குறைபாடு உடையவர்கள்தான்.

    பேதுரு ஒரு முன்கோபக்காரர் - இயேசுவை மறுதலித்தவர், அந்திரேயாவும் யாக்கோபும் அவரை விட்டுவிட்டு ஓடிச்சென்றனர், யூதாசு இஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுத்தான், தோமா அவரை சந்தேகப்பட்டார். இவர்கள் அனைவரும் பல அற்புதங்களை கண்டிருந்தும் அவரை முழுமையாக நம்பவில்லை.

    இத்தகைய குறைபாடுகளுக்கு மத்தியிலும் இயேசு பொறுமையோடு எவ்வாறு வாழ வேண்டும் என்றும், எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்றும், எவ்வாறு அவரை அன்பு செய்ய வேண்டும் என்றும் கற்றுக்கொடுத்தார். இதன் வழியாகவே அவர் உலகை மீட்க வந்தார்.

செபம்:

ஓ இயேசுவே! நீர் எம் வழியாக செயலாற்றுகிறீர் என்ற நம்பிக்யோடு உமது அழைப்பிற்கு செவிமடுக்கவும், நீர் காட்டும் வழியில் நடக்கவும் உதவியருளும். ஆமென்.