Saturday, 25 February 2023

இயேசு மரம் 5 - இயேசுவின் திருமுழுக்கு

   இயேசு மரம் 5

இயேசுவின் திருமுழுக்கு

தவக்காலத்தின் முதல் ஞாயிறு

 


விவிலிய வாசகம்: 

அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார். அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார். அப்பொழுது, 'என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். (மாற் 1:9-12)

சிந்தனை: 

    நீரின்மீது புறா இருப்பது போன்ற அடையாளமானது நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதையும் மனம் மாறி அவரை நாட வேண்டும் என்கிற அவரது ஏக்கத்தையும் நினைவூட்டுகிறது.

இயேசுவின் உறவினரான திருமுழுக்கு யோவான் ஒரு வித்தியசமான மனிதர். ஒட்டக முடியால் ஆன ஆடையயை அணிந்து கொண்டு, வெட்டுக் கிளியையும் காட்டுத் தேனையும் தன் உணவாகக் கொண்டு, பல மணி நேரம் பாவத்தைப் பற்றியும் அதிலிருந்து மனம் மாற வேண்டும் என்பது பற்றியும் பேசி வந்தார்.

மனமாற்றம் என்றால் என்ன? நாம் பாவம் செய்துவிட்டோம், அதனால் இறைஉறவுக்கு கேடு விளைவித்துவிட்டோம் என்று அறியும்போது ஏற்படுவதே மனமாற்றம். அப்போது நமது மனங்களையும் இதயங்களையும் இறைவன் மீது செலுத்தி அவர் தரும் மன்னிப்பை ஏற்று இனி பாவம் செய்யாமல் இறைவனை இன்னும் அதிகமாக அன்பு செய்ய வேண்டும். 

இவற்றை இயேசு தன் பணி வாழ்வில் நுழைந்த தருணத்தில் திருமுழுக்கு யோவான் கற்பித்து வந்தார். யோவான் இயேசு இறைமகன் என்றும், அவர் பாவமில்லாதவர் என்றும், தன்னிடம் திருமுழுக்குப் பெற வேண்டிய அவசியம் இல்லாதவர் என்றும் அறிந்திருந்தார். இருப்பினும் இயேசுவின் சொற்களுக்கு கீழ்ப்படிந்து அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார். 

அப்போது வானம் திறந்தது. இறைஆவியார் புறா வடிவில் வர 'என் அன்பார்ந்த மகன் இவரே. இவர் பொருட்டு நான் பெருமகிழ்வடைகிறேன்' என்னும் விண்ணகத் தந்தையின் குரல் அசரீரியாய் ஒலித்தது. நாமும் மனம் மாறி இறைத்திருவுளத்தை நிறைவேற்றும் போது நம்மிடமும் இறைவன் இதே வார்த்தைகளைக் கூறுவார்.

செபம்:

ஓ இயேசுவே! என் பாவத்தை நான் இனங்கண்டு மனம்மாற கற்பியும். இதனால் உமது இரக்கத்திற்கு உளம் திறக்கவும், உமது அன்புப் பிள்ளைகளாய் வாழவும் அருள்புரியும். ஆமென்.