Tuesday, 4 March 2025

இயேசு மரம் 2 - மூன்று ஞானிகளின் வருகை

மூன்று ஞானிகளின் வருகை

சாம்பல் புதனுக்குப் பின் வரும் வெள்ளி

 



விவிலிய வாசகம்: 

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம் என்றார்கள். இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். மேலும் அவர்களிடம். நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன் என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். (மத் 2:1-3, 7-11)

சிந்தனை: 

    மூன்று ஞானியர்களின் அடையாளம் நாம் அனைவரும் இயேசுவை நோக்கியப் பயணத்தில் ஈடுபடவேண்டும் என்றும், நம்மிடம் உள்ளதை அவருக்கு எளிய காணிக்கையாக அளிக்க வேண்டும் என்றும் நினைவூட்டுகின்றது. அந்த மூன்று ஞானிகளும் பெத்லகேமுக்கு வரும் வழியில் என்னென்ன சவால்களைச் சந்தித்து இருப்பார்கள் என்று நாம் என்றாவது எண்ணிப்பார்த்ததுண்டா? பாலை வனப்பாதையில் பல நாட்கள் ஒட்டகத்தின் முதுகில் ஏறிப் பயணம் செய்தது மட்டுமல்ல மாறாக வழியில் ஏரோதைப் போன்ற ஆபத்தான ஆட்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

    அம்மூன்று ஞானிகளைப் பற்றி மக்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம். மக்கள் அவர்களை முட்டாள்கள் என்று நினைத்திருக்கக்கூடும். ஒரு விண்மீனைப் பின் தொடர்ந்து, அதன் முடிவில் தங்களுடைய விலைமதிப்பற்ற பரிசுகளை ஒரு சிறிய குழந்தையின் முன் தொழுவத்தில் வைப்பது போன்றவை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றியிருக்கலாம். 

    ஆயினும் கூட மூன்று ஞானிகள் தங்கள் தேடலில் உறுதியாக இருந்தனர். அதே போல் நாமும் நமது தேடலில் உறுதியாக இருந்து இயேசுவுக்கு மாட்சி அளிக்க வேண்டும்.

    நாம் நன்கு அறிந்திருப்பவர்களையும் அன்பு செய்பவர்களையும் விட இயேசுவை அதிகமாகத் தேடிக் கண்டடைவதன் மூலம் நம் வாழ்க்கைக்கு ஒரு புதிய திசையை அடையலாம். பிறர் பார்வையி; அது முட்டாள்தனமாகத் தோன்றினாலும் அம்மூன்று ஞானிகளைப் போல நம் தேடலைக் கைவிடவோ அதிலிருந்து பின் வாங்கவோ கூடாது. நம்மிடம் உள்ளதை இயேசுவின் பாதத்தில் வைத்துவிட்டு அவரைப் புகழ்ந்து போற்றுவோம். ஏனெனில் அதைக் காட்டிலும் வேறு எதுவும் முக்கியமானதல்ல.

செபம்:

ஓ இயேசுவே! ஒவ்வொரு நாளும் உமது அருகில் நெருங்கி வர உதவியருளும். ஞானிகள் உம்மைக் கண்டடையும் நோக்கில் விண்மீனில் தங்கள் பார்வையைப் பதிய வைத்தது போல நாங்களும் உம்மில் எங்கள் பார்வையைப் பதியச் செய்தருளும். ஆமென். 


இயேசு மரம் 1 - வார்த்தை மனிதரானார்

வார்த்தை மனிதரானார்

சாம்பல் புதன்

விவிலிய வாசகம்:  யோவா 1: 1-14

சிந்தனை: 

    தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது... வாக்கு மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார். (யோவா 1: 1-14)

மனித உடலேற்பு என்பது நம்முடைய நம்பிக்கையின் மையம். கடவுள் தாமே மனித வரலாற்றில் நுழைந்து, நமது இயல்பை ஏற்றுக்கொண்டு, நம்மிடையே வாழ்கிறார். இயேசு இறையன்பின் தூதுவர் மட்டுமல்ல, மாறாக அவர் அன்பே உருவானவர், அன்பின் வெளிப்பாடு அவர். அவர் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலான எல்லையற்ற இடைவெளியைக் குறைத்து, நமது இருள் நிறைந்த வாழ்வில் தெய்வீக ஒளியைக் கொண்டு வருகிறார்.

நாம் இந்த தவக்காலத்தில் பயணிக்கும்போது, இந்த மறைப்பொருளைப் பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மை விட்டு விலகி இருக்க விரும்பவில்லை. மாறாக, நம்மோடு இணைந்திருக்கவே இந்நிலையைத் தேர்ந்தெடுத்தார். படைப்பபை உருவாக்கிய வார்த்தையானவர் நம்மை மீட்க நம்மில் ஒருவராக ஆனார். இது ஒரு மாபெரும் வரம். இதற்கு நாம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம் என்பதற்காக இந்த தவக்காலம் நம்மை அழைக்கிறது. மனித உடலேற்ற இறைவார்த்தையாகிய இயேசு நம்மில் குடிகொள்ள அனுமதிக்கிறோமா? அவருடைய பிரசன்னத்திற்கு நம் இதயங்களைத் திறந்து, அவருடைய உண்மை நம் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களை வடிவமைக்க அனுமதிக்கிறோமா?


செபம்:

ஓ இயேசுவே! நீர் எதை மதிப்புள்ளதாகக் கருதுகிறீரோ அதையே நாங்களும் ஏற்றுக்கொண்டு வாழ எங்களுக்குக் கற்றுத்தாரும். ஆமென்.



இயேசு மரம் - சாம்பல் புதன்

சாம்பல் புதன்

 விவிலிய வாசகம்: மத் 6: 1-6

சிந்தனை: 

நாம் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கு ஏற்ப எவ்வாறு வாழ வேண்டும் என்பதை இயேசுவை இவ்வுலகிற்கு மனிதனாகப் பிறந்து வாழ்ந்து காட்டினார் என்கிற மறையுண்மையை இந்த சாம்பல் நமக்கு நினைவூட்டுகிறது. அவருடைய ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் நாம் அவரைப் போன்று இருப்பதற்கும் அவரைப் பின்தொடர்வதற்குமான அழைப்பாகும்.

நாம் தவக்காலத்தின் தூண்களான இறைவேண்டல், நோன்பு மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் போன்றவைகளை பற்றி இயேசு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். அவற்றைச் செயல்படுத்துதல் மட்டும் போதாது மாறாக அவற்றை எதற்காக செய்கிறோம்? என்ன மனநிலையோடு செய்கிறோம் என்பவையே முக்கியமானதாகும். 

நாம் தேவையில் இருக்கும் ஏழைகளுக்கு உதவும்போது அவர்கள் மீது உண்மையான அன்பு கொண்டு உதவுகிறோமா? அல்லது தற்பெருமை கொண்டு பிறர் நம்மை நல்லவர்கள், தாராள குணமுடையவர்கள் என்று பாராட்ட வேண்டும் என்பதற்காகச் செய்கிறோமா?

நாம் இறைவேண்டல் செய்யும் போது இறைவனிடத்தில் உண்மையான அன்பினாலும் அவரோடு இருக்க வேண்டும் என்கிற ஆவலாலும் இறைவேண்டல் செய்கிறோமா? அல்லது நாம் இறைவேண்டல் செய்வதைப் பிறர் கண்டு வியப்படைய வேண்டும் என்பதற்காகச் செய்கிறோமா?

இத்தவக்காலத்தில் உலகப் பொருள்கள் மீதுள்ள ஆசையை விடுத்து, இறைவன் நம் வாழ்க்கைக்கு நல்வழியைக் காட்டுவார் என்கிற உண்மையான எதிர்நோக்கு கொண்டு நோன்பிருக்கிறோமா? அல்லது நமது குடும்பத்தில் உள்ளோரும் நண்பர்களும் நாம் நோன்பிருப்பதைக் கண்டு நம்மை மெச்சுகிறார்கள் என்பதற்காக நோன்பிருக்கிறோமா?

செபம்:

ஓ இயேசுவே! உம்மை முன்மாதிரியாகக் கொண்டு எங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள எங்களுக்குக் கற்றுத்தாரும். உலகோரின் கருத்துக்கள் முக்கியமானதல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள உதவியருளும். உம்மை மட்டுமே நாங்கள் மகிழ்விக்க முயலுவோமாக. ஆமென்.


Monday, 3 March 2025

இயேசு மரம் (தவ மரம்)

 

இயேசு மரம் (தவ மரம்)

இயேசு மரம் தவக்காலத்தில் ஏறெடுக்கப்படும் ஒரு பக்தி முயற்சி. திருவருகைக்காலத்திற்கு எவ்வாறு ஈசாய் மரம் ஒரு பொருள் நிறைந்த பக்தி முயற்சியாக விளங்கியதோ அதே போன்று தவக்காலத்திற்கு இயேசு மரம் ஒரு அர்த்தமுள்ள ஆன்மிகப் பயிற்சியாகவும், ஆண்டவரின் வாழ்க்கை, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு ஆகியவற்றை ஆழ்ந்து தியானிக்கவும் உதவுகிறது. ஈசாய் மரத்தில் நாம் இறைமகன் இயேசு மனித உடலேற்ற மறைபொருளின் மீட்புத் திட்டப் பயணத்தில் வழிவந்த மனிதர்களை அடையாளங்கள் வழியாக நினைவு கூருகிறோம். ஆனால் இயேசு மரத்தில் இயேசு பிறந்தது முதல் உயிர்த்து எழுந்தது வரையிலான அவருடைய வாழ்க்கையின் நிகழ்வுகளை அடையாளங்களின் வாயிலாக நினைவுகூர்கிறோம்.


இயேசு மரம் - விவிலியத்தில் மரங்கள்

 விவிலியத்தில் மரங்கள்

இறைவனையும் இறைமக்களையும் தவிர விவிலியத்தில் உயிர் வாழ்வனவற்றுள் மரங்களே அதிகமாக குறிப்பிடப்பட்டுள்ளன. விவிலியத்திலுள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரத்துடனும் தொடர்புடையதாக உள்ளது. பழைய ஏற்பாட்டில் இறைவாக்குரைக்கப்பட்டது போல் இயேசுவும் ஒரு மரத்தில்தான் அறையப்பட்டுதான் இறந்தார். இயேசுவைப் போலவே மரங்களும் பெற்றுக்கொள்வதைவிட அதிகமாகவே கொடுக்கின்றன.


கிறித்தவத்தில் மரங்கள் மாண்புமிக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன, அவை விவிலிய கதைகளோடும், படிப்பினைகளோடும் அடையாளங்களோடும் பின்னிப்பிணைந்துள்ளன. படைப்பின் தொடக்கத்திலிருந்து இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் படிப்பினைகள் வரை, விவிலியத்தில் உள்ள மரங்கள் ஆழமான ஆன்மீக உண்மைகளை அடையாளப்படுத்துகின்றன. மேலும் இந்த விவிலிய மரங்கள் இறை நம்பிக்கையாளர்களுக்கு மதிப்புமிக்க பாடங்களை வழங்குகின்றன.


படைப்பும் மரங்களும்

தொடக்க நூலில்தான் முதல் முதலாக மரங்களைப் பற்றிய குறிப்பு புலப்படுகிறது. 'ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.' (தொநூ 2:9) 

தொடக்க நூலில் இறைவன் மரங்களைப் படைத்ததன் வழியாக கடவுளின் ஞானத்திற்கும் படைப்பாற்றலுக்கும் முன்னேற்பாட்டிற்கும் ஒரு சான்றாக திகழ்கிறது. பசுமையான தாவரங்களும் அடர்ந்த மரங்களும் 'நல்லவை' என்று விவரிக்கப்படுகின்றன. இது மனிதகுலத்திற்கும் கடவுளுக்கும் இடையிலான இணக்கமான உறவின் பின்னணியை உருவாக்குகிறது. படைப்பின் மீது கடவுள் அருளும் ஏராளமான ஆசிர்வாதங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வாழ்வையும், வளர்ச்சியையும், செழுமையையும் குறித்துக் காட்டுகின்றன. கடவுளின் நுணுக்கமான வடிவமைப்பையும், படைக்கப்பட்ட உலகில் மனிதர்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்ற இறைவிருப்பத்தையும் நம்பிக்கையாளர்களுக்கு அவை நினைவூட்டுகின்றன.


தொடக்கத்திலிருந்த இரு மரங்கள்

தொடக்க நூலில் ஏதேன் தோட்டத்தில் வாழ்வின் மரமும் நன்மை தீமையை அறிவதற்கு ஏதுவான மரமும் இருந்தது குறிப்பிடத்தக்கது. வாழ்வின் மரம் கடவுளுடனான என்றுமுள ஒன்றிப்பையும் நிலைவாழ்வையும் குறிக்கிறது. இருப்பினும், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரமானது கடவுளுக்குக் கீழ்படிதல்-கீழ்படியாமை ஆகிய இரண்டிற்கும் இடையேயான தெரிவை முன்வைக்கிறது. இரண்டு மரங்களும் மனிதர் உண்பதற்கு தடை செய்யப்பட்டதாய் இருந்தன. ஆனால் விலக்கப்பட்ட அம்மரத்தின் கனிகளை உண்ண வேண்டும் என்று மனிதர் எடுத்த முடிவே அவர்களை கடவுளை விட்டு பிரித்தது. இந்த மரங்கள் கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தையும், பாவத்தின் விளைவுகளையும், இயேசு கிறிஸ்துவின் வழியாக மனித இனத்திற்கு மீட்பின் தேவையையும் சுட்டிக்காட்டுகின்றன.


இயேசுவும் மரங்களும்

இயேசு தன் வாழ்நாளிலும் பணி வாழ்விலும் ஆன்மிக உண்மைகளை வெளிப்படுத்த மரங்களையும் இயற்கையையும் அடிக்கடி பயன்படுத்தினார். உதாரணமாக, இறைநம்பிக்கையின் ஆற்றலை கடுகு விதை வாயிலாக கூறி அது பெருவிருட்சமாக வளர தன்னகத்தே கொண்டிருந்த திறனையும் வலியுறுத்தினார். நம்பிக்கைக் கொண்டு பலன்தரும் வாழ்வு வாழ்வதைக் கற்றுக்கொடுக்க இயேசு பயன்படுத்திய அத்தி மரம் கனிதரும் ஆன்மிகத்துக்கும் உண்மையான சீடத்துவத்துக்குமான ஆற்றலுள்ள அடையாளமாக அமைந்தது. இயேசு அறையப்பட்ட மரத்தாலான சிலுவை பெரும்பாலும் 'சிலுவை மரம்' என்றே வழங்கப்பட்டு வருவது கண்கூடு. இதுவே மனிதகுல மீட்பின் வழியாக அருளப்பட்ட இறையன்பின் உச்சகட்ட வெளிப்பாடு.

பல உவமைகளில், முக்கியமான செய்திகளை வெளிப்படுத்த இயேசு மரங்ளை உருவகங்களாகப் பயன்படுத்தினார். விதைப்பவரையும், விதைகளையும் பற்றிய உவமையில் ஏற்றுக்கொள்ளும் இதயம் வளமான மண்ணுடன் ஒப்பிடப்படுகிறது, அங்கு (கடவுளின் வார்த்தையைக் குறிக்கும்) விதை வேரூன்றி, ஏராளமான அறுவடையை அளிக்கிறது. திராட்சை செடியும் அதன் கிளைகளையும் பற்றிய உவமையானது ஆன்மிக கனிகளைத் தருவதற்கு உண்மையான திராட்சைச் செடியான இயேசுவுடன் இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. இந்த உவமைகள் கிறிஸ்தவர்களுக்கு ஆன்மிக ஊட்டம், உறுதிப்பாடு மற்றும் கிறிஸ்துவை சார்ந்திருப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகி;ன்றன. 


சிலுவை எனும் அடையாளம்  

கிறிஸ்தவத்தின் முக்கியமான மைய அடையாளமாக சிலுவை ஒரு மரமாக சித்தரிக்கப்படுகிறது. ஒரு மரம் இருப்பிடத்தையும் வாழ்வாதாரத்தையும் வழங்குவது போல் சிலுவை மரமானது இயேசு கிறிஸ்துவின் தியாகத்தையும், மீட்பையும், மன்னிப்பையும், இறைநல்லிணக்கத்தையும் அடையாளப்படுத்துகிறது. இது இறையன்பையும், இறைநம்பிக்கையாளர்களுக்கு நிலைவாழ்வின் எதிர்நோக்காகவும் செயல்பட்டு, இறையருளும் மீட்பும் இணை சேரும் சந்திப்பைக் குறிக்கிறது. 


படைப்பு முதல் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் போதனைகள் வரை, மரங்கள் கிறிஸ்தவத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைக் கொண்டுள்ளன. அவை இறைப்பராமரிப்பு, கீழ்ப்படிதலுக்கும் கீழ்ப்படியாமைக்கும் இடையேயான தேர்வு, சிலுவையில் இயேசுவின் மீட்புப் பணி ஆகியவற்றை அடையாளப்படுத்துகின்றன. விவிலிய மரங்கள் இறைநம்பிக்கை கொண்டோருக்கு நம்பிக்கை, வளர்ச்சி, பலன் அளித்தல் மற்றும் இறையன்பின் ஆற்றல் பற்றிய ஆழமான ஆன்மீக பாடங்களை வழங்குகின்றன. திருவிவிலியத்தில் உள்ள மரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி கிறிஸ்தவர்கள் சிந்திக்கும்போது, கடவுளுடனான தங்கள் உறவை ஆழப்படுத்தவும், தங்கள் வாழ்க்கையில் பலன் தரவும், தங்கள் படைப்பாளரின் ஏராளமான அருளிலும் இரக்கத்திலும் ஆறுதலைக் காணவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


உரோமையர்களுக்கு ஒருவரைக் கொல்ல பல வழிகள் உள்ளன. கத்தியால் குத்தி கொல்லுதல், கல்லெறிந்து கொல்லுதல், உயிருடன் எரித்து கொல்லுதல், நீரில் மூழ்கடித்து கொல்லுதல், கொலோசியம் என்ற உள்ளரங்கத்தில் சிங்கங்களுக்கு இரையாக்கிக் கொல்லுதல் ஆகியவை மரண தண்டனைக்கான வழிகளாகும். ஆனால் இயேசு வேர்களும் கிளைகளும் அகற்றப்பட்ட ஒரு மரத்தில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.