Wednesday, 30 November 2022

ஈசாய் மரம் - திருவருகைக் கால முதல் வார வியாழன்

திருவருகைக் கால முதல் வார வியாழன்

ஈசாக்கு

வாசகம்: தொடக்க நூல் 22: 1 - 19 

சிந்தனை:

ஆபிரகாமும் சாராவும் நீண்டகாலமாக எதிர்பார்த்த மகனான ஈசாக்கு, ஆபிரகாமை பல நாடுகளுக்கு தந்தையாக்கும் இறைவாக்குறுதி நிறைவேற்றப்பட்டதை அடையாளப்படுத்துகிறார். கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை என்பதைக் காட்டும் அவரது பிறப்பு ஒரு அதிசயம். ஈசாக்கின் வாழ்க்கை கடவுளின் உண்மைத்தன்மையை உணரவும் அவர் மீது நம்பிக்கைக் கொள்ளவும் நம்மை அழைக்கிறது.

கடவுள் ஆபிரகாமின் நம்பிக்கையைச் சோதித்தப் பார்க்க ஈசாக்கை பலியிடுமாறு கேட்டார். இது ஈசாக்கினுடைய வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. தன்னைத் தான் தன் தந்தை பலியிடப் போகிறார் என்பதை அறியாமலேயே பலியிடுவதற்குத் தேவையான விறகு கட்டைகளை ஈசாக்கு மோரியா மலைமீது சுமந்து சென்றார்.  

ஆபிரகாம் கடவுள் மீத முழுமையான நம்பிக்கை வைத்தார். அவருடைய திட்டத்தை நம்பினார். ஆகையால் கடவுள் இறுதியில் ஈசாக்கிற்கு பதிலாக ஆட்டுக்கிடாயை பலியிடுமாறு பணித்தார். இந்நிகழ்வு சிலுவை மரத்தை சுமந்து உலகின் பாவங்களுக்கு இறுதி பலியாக மாறிய கடவுளின் ஆட்டுக்குட்டியான இயேசுவை முன்னறிவிக்கிறது. ஈசாக்கு செய்யவீருந்த தியாகம் கடவுளின் அன்பையும் பராமரிப்பையும் சுட்டிக்காட்டுகிறது, இது அவருடைய மகன் மூலம் மனிதகுலத்தை மீட்பதற்கான அவரது திட்டத்தின் ஆழத்தை நமக்கு நினைவூட்டுகிறது.

செபம்:

கருணைக் கடலே இறைவா! ஆபிரகாமுக்கும் ஈசாக்கிற்கும் உமது பராமரிப்பை நல்கி உமது வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். உமது திட்டங்களில் நம்பிக்கை வைத்து உமது ஆசீர்வாதங்களை எங்கள் வாழ்வில் காண எங்களுக்கு உதவு புரியும். ஆமென்.


Tuesday, 29 November 2022

ஈசாய் மரம் - திருவருகைக் கால முதல் வார புதன்

 திருவருகைக் கால முதல் வார புதன்

ஆபிரகாம்

வாசகம்: தொடக்க நூல் 12:1-7, 15:1-6

சிந்தனை: 

நம்பிக்கையின் தந்தை என்றழைக்கப்படும் ஆபிரகாம் தான் வாழும் விட்டையும் நாட்டையும் விட்டு தனக்கு அறிமுகமில்லாத வேறொரு புதிய நாட்டிற்கு செல்ல கடவுளால் கட்டளையிடப்பட்டார். அவர் பெரிய இனத்திற்கு தந்தையாகவும், அவருடைய வழிமரபினரால்; உலக நாடுகள் ஆசி பெரும் என்றும் கடவுள் அவருக்கு வாக்களித்தார்.  தான் வயது முதிர்த்த போதிலும், சாராவால் கருவுற இயலாத போதிலும் கடவுளுடைய வாக்குறுதியில் நம்பிக்கைக் கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். (தொநூ 15:6)

கடவுள் அளித்த வாக்குறுதியின் பயனாக முதிர்ந்த வயதில் தான் பெற்றுக் கொண்ட பிள்ளையை கடவுள் பலியாகக் கேட்ட போது ஆபிரகாமின் நம்பி;க்கை ஆழமாக சோதிக்கப்பட்டது. இறைப்பராமரிப்பில் நம்பிக்கைக் கொண்டு ஆபிரகாம் கீழ்ப்படிந்தார், ஆகையால் கடவுள் ஈசாக்கிற்கு பதிலாக ஆட்டுக்கிடாவை பலியிட வழங்கினார். இச்செயல், உலகின் மீட்புக்காக தம்முடைய ஒரே மகனாகிய இயேசுவை பலியாக அளித்த கடவுளின் உயர் தியாகத்தை முன்னறிவித்தது.

ஆபிரகாமின் வாழ்வு கடவுளோடு நாம் கொண்டுள்ள உறவில் நம்பிக்கை வைத்து கீழ்ப்படிதலோடு வாழ்வதற்கான முக்கியத்துவத்தை நமக்கு நினைவூட்டுகிறது. முன்னோக்கி செல்லும் பாதை தெளிவற்றதாகவோ அல்லது சவாலாகவோ இருக்கும்போது,  கடவுளின் வாக்குறுதிகளில் ஆபிரகாம் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கை ஒரு எடுத்துக்காட்டு.


செபம்: 

விண்ணகத் தந்தையே இறைவா! நீர் அளித்த வாக்குறுதிகள் சாத்தியமற்றதாகத் தோன்றினாலும் அதில் நம்பிக்கை வைத்த ஆபிரகாமின் எடுத்துக்காட்டிற்காக நன்றி. உமது வாக்குறுதிகளுக்கு நீர் எப்போதும் உண்மையாக இருக்கிறீர் என்பதை அறிந்து, கீழ்ப்படிதலோடும், நம்பிக்கையோடும் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி வாழ உதவிபுரியும். ஆமென்.


Monday, 28 November 2022

ஈசாய் மரம் - திருவருகைக் கால முதல் வார செவ்வாய்

 திருவருகைக் கால முதல் வார செவ்வாய்

நோவா

வாசகம்: தொடக்க நூல் 6:11-22, 9:8-13

சிந்தனை

நோவாவின் வாழ்வு நம்பிக்கை, கீழ்ப்படிதல், இறை உடன்படிக்கை ஆகியவற்றை மையமாக கொண்டு அமைந்தது. வன்முறையும், ஊழலும் தலைவிரித்து ஆடிய போது நோவா நேர்மையுள்ள மனிதராக தனித்து நின்று கடவுளோடு இணைந்திருந்தார். பெருவெள்ளம் வருமென கடவுள் எச்சரித்த போது, அவருடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்து பேழையை கட்டினார். நோவாவின் மூலம் மனித இனத்தையும் பூமியின் உயிரினங்களையும் பாதுகாத்து, படைப்பின் மீது தான் கொண்ட அக்கறையை வெளிப்படுத்தினார். வெள்ளப்பெருக்கிற்குப் பின் இனி ஒரு போதும் நீரினால் உலகை அழிக்க மாட்டோன் என்று அவர் அளித்த வாக்குறுதியின் அடையாளமாக வானவில்லை கொடுத்தார். இக்கதை இயேசுவை முன்வைத்து, அவர் மூலம் பெறவிருக்கும் இறை-மனித நல்லிணக்கத்துக்கான புதிய நிலையான உடன்படிக்கையை சுட்டிக்காட்டுகின்றது.

கடவுள் மீது நோவா கொண்டிருந்த இறைப்பற்றும் இறைநம்பிக்கையும், நாம் கடவுளுடைய திருவுளத்தை முழுமையாக புரிந்து கொள்ளாவிட்டாலும் கீழ்ப்படிதலுடன் வாழ நமக்கு சவால் விடுக்கிறது. எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும், கடவுளின் இரக்கம் பெரியது என்றும், அவருடைய வாக்குறுதிகள் அசைக்க முடியாதவை என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.


செபம்

அன்பின் இறைவா! நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் நிறைந்த நோவாவின் எடுத்துக்காட்டான வாழ்வுக்காக நன்றி. உம்முடைய வாக்குறுதிகளின் மீது நம்பிக்கைக் கொண்டு எங்களின் கடினமான சூழ்நிலையிலும் உம்மோடு பயணிக்க உதவியருளும். இதனால் வானவில்லில் அடையாளப்படுத்தப்பட்டு கிறிஸ்துவில் நிறைவெய்திய உம்முடைய இரக்கத்தையும் அன்பையும் என்றும் நினைவில் கொள்வோமாக. ஆமென்.

Sunday, 27 November 2022

ஈசாய் மரம் - திருவருகைக் கால முதல் வார திங்கள்

 திருவருகைக் கால முதல் வார திங்கள்

ஆதாம் - ஏவாள்

வாசகம்: தொடக்க நூல் 3:1-7


சிந்தனை: 

இன்று ஆதாம் ஏவாளின் கதை நமக்கு நினைவூட்டப்படுகிறது. படைப்புச் செயலில் ஆதாமும் ஏவாளும் கடவுளோடு மனித இனம் கொண்ட தனித்துவமான உறவு நிலையின் மைய அடையாளங்கள்.  இவர்கள் இயேசுவின் வழிமரபில் முதன்மையான முன்னோர்கள். கடவுளின் சாயலில் படைக்கப்பட்டு, அவருடைய உயிர் மூச்சின் மூலம் உயிர் பெற்று, அவருடன் இணக்கமாக வாழ ஏதேன் தோட்டத்தில் வைக்கப்பட்டவர்கள். 

இவர்களுடைய கீழ்ப்படிதலின்மையால் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டனர். அதனால் பாவத்தை இவ்வுலகிற்கு கொண்டு வரப்பட்டு துன்பமும் இறப்பும் இவ்வுலகில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும், கடவுள் அவர்களுடைய தோல்வியிலும்கூட, அவர்களைக் கைவிடவில்லை. அவர்களை உடுத்தி, உணவளித்து, ஒரு மீட்பரை வாக்களித்தார் (தொநூ 3:15), இதன் மூலம் இயேசு கிறிஸ்துவின் வழி வரும் இறுதிகால மீட்பை முன்னறிவித்தார். 

ஆதாம்-ஏவாளின் கதை பாவத்தின் விளைவுகளை நமக்கு நினைவூட்டுகிறது. ஆயினும் கடவுளின் இரக்கத்தையும் இழந்ததை மீட்டெடுக்கும் அவரது விருப்பத்தையும் நினைவூட்டுகிறது. புதிய ஆதாமான இயேசு, பாவத்தையும் இறப்பையும் வென்று நம்மை மீண்டும் இறை உறவிற்குள் கொண்டுவருவதற்கான மீட்பின் திட்டத்திற்கான அரங்கை அமைக்கிறது. 


செபம்:

விண்ணகத் தந்தையே இறைவா! நாங்கள் தோல்வியுற்ற போதும் நீர் காட்டிய இரக்கத்திற்காகவும் அன்பிற்காகவும் நன்றி கூறுகின்றோம். நாங்கள் பாவத்திலிருந்து விலகி, நீர் எங்களுக்காக அமைத்துள்ள பாதையில் செல்லவும், உமது மீட்பின் வாக்குறுதியில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொள்ளவும் உதவி புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக மன்றாடுகின்றோம். ஆமென்.


Saturday, 26 November 2022

ஈசாய் மரம் - திருவருகைக் கால முதல் வார ஞாயிறு

 திருவருகைக் கால முதல் வார ஞாயிறு

படைப்பு

வாசகம்: தொடக்க நூல் 1:1 - 2:3

சிந்தனை: 

ஈசாய் மர பக்தி முயற்சி படைப்போடு தொடங்குகிறது. நாம் கண்டு அனுபவிக்கிற அனைத்தும் கடவுளின் உன்னதமான படைப்பு என்பதை இது உணர்த்துகிறது. தொடக்கத்தில் கடவுள் விண்ணகத்தையும், மண்ணகத்தையும் அனைத்து உயிரினங்களையும் படைத்த, அவை அனைத்தும் நல்லது எனக் கண்டார். ஒழுங்கின்மையிலிருந்து இணக்கத்தை உருவாக்கி, மனித குலத்திற்கு தன் மூச்சுக் காற்றை அளித்து தன்னுடைய சாயலில் மனிதர்களைப் படைத்த கடவுளின் அன்புச் செயலை எடுத்துரைக்கிறது. இது கடவுளின் கொடைத் திறனையும், அக்கறையையும் பிரதிபலிக்கிறது. உலகின் ஒவ்வொரு பகுதியும் ஒரு இலக்குடனும், அழகுடனும், படைக்கப்பட்டு மனிதர்களின் ஆளுமைக்குக் கொடுக்கப்பட்டது. இது படைப்பின் மீது நமக்குள்ள பொறுப்பையும் இறைத் திருவுளத்திற்கேற்ப இணக்கமாக வாழ்வு வாழவும்  நமக்கு நினைவூட்டுகிறது. 


செபம்:

விண்ணகத் தந்தையே இறைவா! அழகாக இவ்வுலகைப் படைத்து அதில் உம் சாயலில் எங்களையும் படைத்ததற்காக நன்றி. எங்களைச் சுற்றியுள்ள உலகில் உமது மாட்சியைக் காணவும், பூமியை நீர் எங்களிடம் ஒப்படைத்ததைப் போல பராமரிக்கவும் எங்களுக்கு உதவி புரியும். ஆமென்.


ஈசாய் மர அடையாளம்

 ஈசாய் மரம்

திருவருகைக் கால தயாரிப்பு பக்தி முயற்சி



வாசகம்: எசாயா 11:1-2

ஈசாய் என்பவர் யார்? 

ஈசாய் திருவிவிலியத்தில் மிகவும் முக்கியமானவராகவும் தாவீது அரசரின் தந்தையாகவும் அறியப்படுகிறார். இவரைப் பற்றி எசாயா இறைவாக்கினர் 'ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்ளூ அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்' (எசாயா 11:1) என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இறைவாக்கு மீட்பராகிய இயேசு கிறிஸ்து வருகையைக் குறிப்பதாக கருதப்படுகிறது. 

ஈசாய் மரத்தின் வரலாறு

இது ஈசாயின் அடிமரத்தைக் கொண்டு எசாயா கூறிய இறைவாக்கினை மையப்படுத்தி (எசாயா 11:1) உருவான பக்தி முயற்சியாகும். இது மத்திய காலங்களில் திருஅவையில் உருவானது எனக் கருதப்படுகிறது. இது முதலின் கலை வடிவங்களில் காணப்பட்டதாக தெரிகிறது. பெரும்பாலும் வண்ணக் கண்ணாடி சன்னல்களிலும், ஆடைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் அடிமரத்தில் ஈசாய் நிற்க அதன் உயர்நத உச்சியில் இயேசு நிற்பதைப் போலவும் சித்தரிக்கப்பட்டன.

ஈசாய் மர ஆன்மிகம்

ஈசாய் மர பக்தி முயற்சி திருவருகைக் காலத்தில் ஏறெடுக்கப்படும் அர்த்தமுள்ள தயாரிப்பு நிகழ்வாகும். இது மீட்பு வரலாற்றை படிப்படியாக அறிந்து பொருளுள்ள வகையில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்காக நம்மையே தயாரிக்க உதவுகிறது. இது இயேசுவின் வருகை வரலாற்றில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணர்த்துகிறது. இது பல நூற்றாண்டுகால இறைவாக்குகளும் மீட்புக்கான இறைவன் அளித்த உடன்படிக்கையும் இயேசுவில் நிறைவு பெற்றதை அடையாளப்படுத்துகிறது. இது ஆதாம் தொடங்கி இயேசு வரையுள்ள மத்தேயு கூறிய மூதாதையர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டும் மிகமுக்கியமான இன்னும் பல நபர்களை நினைவு கூரும் பக்தி முயற்சியாகும். இது ஒரு திருவருகைக்கால நாட்காட்டியாகவும் செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஈசாய் மரத்தில் ஒரு வட்ட வடிவிலான அடையாளங்கள் அவர்களை குறிக்கும் வகையில் தொங்கவிடப்படும். இதன் வழியாக திருஅவையோடு இணைந்து நாமும் மீட்பு வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற முன்னோர்களைக் குறித்து தியானித்து அவர்களைப் பற்றி அறிந்து அவர்களை பெற்றுக் கொண்ட அழைப்பினையும் அருளையும் நாமும் உணர முடிகிறது.


ஈசாய் மரம் தரும் செய்தி 

கடவுள் நம்பிக்கைக்கு உரியவர், அவர் தான் அளித்த வாக்குறதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற மைய சிந்தனையை இந்த ஈசாய் மர பக்தி முயற்சி நமக்கு படிப்பினை ஆக்குகிறது. வரலாறு முழுவதிலும் மனத இனத்துக்கு மீட்பைக் கொணர கடவுள் அயராது செயல்படுகிறார் என்பதை இது உணர்த்துகிறது. இயேசுவின் பிறப்பினை படைப்பின் தொடக்கத்திலிருந்து வரையறுப்பதன் வழியாக பின்வரும் ஆன்மிகச் செய்திகள் நமக்குத் தரப்படுகின்றன. 

1. எதிர்நோக்கு:

மீட்பரை அனுப்புவதாக கடவுள் கொடுத்த வாக்குறுதியை இயேசு நிறைவேற்றுகிறார் என்பதை ஈசாய் மரம் நமக்கு நினைவூட்டுகிறது. பழைய ஏற்பாட்டின் மக்கள் மெசியாவுக்காக எதிர்நோக்குடன் காத்திருந்தது போல், நம் வாழ்வில் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்காகவும் அவருடைய இரண்டாம் வருகைக்காகவும் எதிர்நோக்குடன் வாழ அழைக்கப்படுகிறோம்.

2. திருவிவிலியத்தின் ஒன்றிப்பு

இது பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கிறது. கிறிஸ்துவே அவ்விரண்டின் மையாக இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. எவ்வாறு திருவிவிலியத்தில் இடம்பெறும் ஒவ்வொரு மனிதரும் கிறிஸ்துவில் நிறைவுரும் இறைத்திருவுளத்தில் பங்கேற்கிறார்கள் என்பதையும் வெளிப்படுக்கிறது.

3. தயாரிப்பு

இயேசுவின் பிறப்பு விழாவிற்காக நம் இதயங்களைத் தயாரிக்க இந்த பக்தி முயற்சி நம்மை தூண்டுகிறது. ஏன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்பதை இது விளக்குகிறது. 


திருவருகைக்கால மெழுகுவர்த்திகளை ஏற்றும் வழிமுறை - வாரம் 1

திருவருகைக்கால முதல் ஞாயிறு

(இறைவாக்கினர்களின் மெழுகுதிரி)

இறைவாக்கினர்களின் ஒளி                                                                                        ஊதா நிறம்

இது இறைவாக்கினர்களின் மெழுகுத்திரி என்றழைக்கப்படுகிறது. இஸ்ரயேல் மக்களின் இறைவாக்கினர்கள் அனைவரும் மெசியாவின் வருகையைப் பற்றி மக்களுக்கு அறிவித்தனர். தாவீதின் மரபிலிருந்தே மெசியா பிறப்பார் என்றும் முன்னறிவித்தனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பிலே நமது நம்பிக்கையும் மலர்ந்தது. இயேசு மீண்டும் வருவார் என நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருக்கிறோம். உலகின் ஒளியாக பெத்லகேமில் பிறந்த இயேசு மீண்டும் வந்து நம்மை நம் பாவங்களிலிருந்து மீட்பார் எனும் உறுதியான எதிர்நோக்குடன் இந்த முதல் ஒளியை ஏற்றுகிறோம்.

மெழுகுதிரியை ஏற்றுதல்

(அருள்பணியாளர் மெழுகுதிரியை ஏற்றுவார்)

இறைவேண்டல்

இறைவா! எங்கள் பாவங்களினால் ஏற்படும் தீங்கிலிருந்து நாங்கள் மீட்கப்படுவதற்கும், நீர் அளிக்கும் விடுதலையினால் நாங்கள் காப்பாற்றப்படவும், நாங்கள் தகுதியுடையவர்களாகும்படி உமது பாதுகாப்பின் அருளை அளித்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.  ஆமென்.



Friday, 25 November 2022

திருவருகைக்கால தழைவளையத்தை ஆசிர்வதித்தல்

திருவருகைக்கால தழைவளையத்தை ஆசிர்வதித்தல்

அறிவுரை

இச்சடங்கு ஆலயத்தில் நிறைவேற்றப்படும் போது மக்களின் பார்வைக்கு ஏற்றவாறு மெழுகுதிரிகளின் அளவு பெரியதாக இருத்தல் நன்று.
அனைவரின் பார்வைக்கும் தெரியும் வண்ணம் தழைவளையத்தை ஒய்யாரமான இடத்தில் அமைத்தல் வேண்டும்.
வாசக மேடையையோ, பீடத்தையே, அருள்பணியாளர் அமரும் இருக்கையையோ மறைக்காமல் இது அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும்.


தொடக்க இறைவேண்டல்

முதல்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே

பதில்: ஆமென்.

முதல்: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.

பதில்: அவரே விண்ணையும் மண்ணையும் படைத்தவர்!

மன்றாடுவோமாக! 

உமது திருவார்த்தையால் அனைத்தையும் புனிதமாக்கிய இறைவா! உம்முடைய அருளை இத்தழைவளையத்தின் மீது பொழிந்தருளும். கிறிஸ்துவின் வருகைக்காக எங்கள் இதயங்களைத் தயார்படுத்தவும், உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டுமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்:  ஆமென்.

(அருள்பணியாளர் தழைவளையத்தின் மீது புனித நீர் தெளிக்கிறார்.
தனியாக இறைவார்த்தை வழிபாட்டினுள் இதை நிகழ்த்தும் போது பின்வருவனவும் மேலே கொடுக்கப்பட்ட வழிமுறையோடு சேர்த்துக் கொள்ளப்படும்.)

அருள்வாக்கு:

எசாயா 9: 1-2, 5-6 (அ)
எசாயா 63: 16-17 ரூ 19 (அ)
எசாயா 64: 2-7


மன்றாடுவோமாக

எங்கள் ஆண்டவராகிய இறைவா! உம் திருமகன் இயேசு கிறிஸ்துவுக்காக உம்மைப் போற்றுகிறோம். அவர் இம்மானுவேல், அனைத்து மக்களின்; எதிர்நோக்கு அவரே,எங்களுக்குக் கற்பித்து வழிநடத்தும் ஞானமும் அவரே, எல்லா நாடுகளின் மீட்பரும் அவரே. ஆண்டவராகிய இறைவா! இந்த தழைவளையத்தின் மெழுகுதிரிகளை ஒளியேற்றும் போது எங்கள் மீது உமது ஆசீரைப் பொழிந்தருளும். இந்த தழைவளையமும் அதன் ஒளியும் மீட்பைக் கொண்டு வர கிறிஸ்து அளித்த வாக்குறுதியின் அடையாளமாக விளங்குவதாக. அவர் தாமதம் செய்யாமல் விரைவில் வருவாராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.


 

திருவருகைக்கால இளந்தளிர் வளையம்

 திருவருகைக்கால இளந்தளிர் வளையம்

வரலாறு

திருவருகைகக் காலத்தில் பச்சைநிற தழைகளைக் கொண்டு வளையம் அமைத்து அதில் நான்கு மெழுகுத்திரிகளைப் பொருத்தி ஒளியேற்றும் வழக்கம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்ட்டின் லூத்தரால்; திரு அவையில் ஏற்பட்ட பிரிவினை காலத்தில், ஜெர்மனி நாட்டில் தொடங்கப்பட்டது. ஜெர்மனியில் வாழும் கத்தோலிக்கர்கள் இவ்வழக்கத்தை 1920 இல் பின்பற்றினர். கிரேக்க உரோமானியர்களைப் போன்ற பல தெய்வ வழிபாடு கொண்ட மக்கள், குளிர்காலத்தின் இருளை மெழுகுத்திரி கொண்டு அகற்றி, இளவேனிற் பருவத்தின் குளிரையும் வெப்பத்தையும் தருமாறு, சூரியக் கடவுளிடம் வேண்டுவார்கள். காலச் சுழற்சியும், வாழ்வின் வசந்தமும் மீண்டும் வரும் என்பதை இம்மலர் வளையம் அவர்களுக்கு நினைவூட்டும். 

இந்தப் பின்புலத்தில், கிறிஸ்தவர்கள் பிற்காலத்தில் இம்மெழுகுதிரிகளுக்கு 'கிறிஸ்துவே உலகின் ஒளி' (யோவா 3:17-21) என்று பொருள்படும் நோக்கில் ஒரு புதிய, விவிலிய அர்த்தத்தை இதற்குக் கொடுத்தார்கள்.


திருவருகைக்கால தழைவளையத்தின் விளக்கம்

திருவருகைக்கால மலர் வளையத்தில் ஐந்து மெழுகுதிரிகள் வைக்கப்பட்டிருக்கும். நடுவில் ஒரு பெரிய மெழுகுதிரி வெள்ளை நிறத்தில் இருக்கும். அதைச் சுற்றி நான்கு மெழுகுதிரிகள் (மூன்று ஊதா நிறத்திலும் ஒன்று இளஞ்சிவப்பு நிறத்திலுமாக) பச்சை இலைகளால் சூழப்பட்டு இருப்பதையே திருவருகைக்கால மலர் வளையம் என்கிறோம். வட்ட வடிவமான இம்மலர்வளையம் தொடக்கமும், முடிவும் இல்லாத இறைவனையும், நிலை வாழ்வையும் குறிக்கின்றது. நம் மீட்பரான கடவுள், கிறிஸ்து இயேசுவில் புதிய, முடிவில்லா வாழ்வை நம்பிக்கையாளர்களுக்குத் தருகிறார் என்பதை, இப்பச்சை மலர் வளையம் நினைவூட்டுகின்றது. நான்கு மெழுகுதிரிகளும் நான்கு திருவருகைக்கால ஞாயிறுகளையும் குறிக்கின்றது. திருவருகைக் கால மலர் வளையத்தில் உள்ள நான்கு மெழுகுதிரிகள், திருவருகைக் காலத்தில் வரும் நான்கு வார கால உள்ளாந்த, ஆன்மிக தயாரிப்பைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒவ்வொரு மெழுகுதிரிகளும் 1000 ஆண்டுகளை பிரதிப்பலிக்கிறது. மேலும் நான்கு மெழுகுதிரிகளும், மனித சமுதாயம் 4000 ஆண்டுகளாக மெசியாவின் வருகையை நோக்கி காத்திருப்பதை அடையாளப்படுத்துகின்றன.

திருவருகைக் காலத்தின் முதலாம், இரண்டாம், மற்றும் நான்காம் வாரங்களின் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊதா நிற மெழுகுதிரிகள் ஒவ்வொன்றாக ஏற்றப்படும். இளஞ்சிவப்புநிற மெழுகுதிரி திருவருகைக்காலத்தின் மூன்றாவது ஞாயிறன்று ஏற்றப்படும். அந்த ஞாயிறு 'மகிழ்ச்சியின் ஞாயிறு' என அழைக்கப்படுகின்றது. நடுவில் இருக்கும் ஒரு பெரிய வெள்ளை நிற மெழுகுதிரி கிறிஸ்து பிறப்பு விழாவன்று ஏற்றப்படும். திருவழிபாட்டு நிறமான ஊதா (கருஞ்சிவப்பு) நிறம் செபம், தவம், தியாகம் ஆகியவற்றோடு கூடிய ஒறுத்தல் காலத்தைக் குறிக்கிறது. திருவருகைக் காலத்தை ஒரு 'குட்டி தவக்காலம்' என்றே அழைக்கலாம். ஏனெனில் பாவமாகிய இருளிலிருந்து, வாக்களிக்கப்பட்ட மீட்பை நோக்கி, அகில உலகமே கிறிஸ்துவின் பிறப்புக்காகக் காத்திருந்த காலத்தைக் இது குறிக்கிறது.

முதல் ஞாயிறன்று ஏற்றப்படும் மெழுகுத்திரி முதுபெரும் தந்தையர்களையும், இரண்டாவது திரி இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த எசாயா உள்ளிட்ட இறைவாக்கினர்களையும், மூன்றாம் திரி இயேசுவின் வருகைக்காக மக்களைத் தயாரித்த திருமுழுக்கு யோவானையும், நான்காம் திரி இயேசுவின் தாய் மரியாவையும் நினைவுபடுத்துகின்றன. இன்னும் ஒரு சில மலர்வளையங்களில் ஐந்தாவது வெள்ளை நிற 'கிறிஸ்து திரி' ஏற்றப்படுகிறது. இது தூய்மையை குறிக்கிறது. கிறிஸ்துமஸ் அன்று இது ஏற்றப்பட்டு நடுவில் வைக்கப்படுகிறது. 

இறைவன் நம்மேல் கொண்ட அன்புக்கு முடிவே இல்லை என்பதை வட்ட வடிவ அமைப்பும் இறைவனின் அன்பு நிரந்தரமானது என்பதை பச்சைநிற தழைகளும் நினைவுட்டுகின்றன. நம் மீட்பராம் இயேசுவின் வருகைக்காக இஸ்ரயேல் மக்கள் காத்திருந்ததை நினைவூட்டவும், உலகின் ஒளியாய் இயேசு வருவார் எனும் வாக்குறுதியைக் குறித்துக்காட்டவும், மலர் வளையத்தில் ஒளியேற்றும் இச்சடங்கு திருவருகைக் காலத்தில் நிறைவேற்றப்படுகிறது.

'காரிருள் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்'  (எசா 9:2)



துணை: 
1. அருள்பணி. ராக் சின்னப்பா, 'ஈசாய் மரம்,'
2. mycatholicbelief.blogspot.com

திருவருகைக் கால அடையாளங்கள்

 திருவருகைக் கால அடையாளங்கள்

 

கிறிஸ்துமஸ் குடில்

நான்காம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட கிறிஸ்துமஸ் விழா நாளடைவில் வீண் ஆடம்பரத்துக்கும் பகட்டு விளம்பரங்களுக்கும் உள்ளானது. ஆகவே 1224ஆம் ஆண்டு அசிசி நகர் புனித பிரான்சிஸ் 'இயேசு ஏழ்மையிலும் வறுமையிலும் புறக்கணிப்பட்ட சூழ்நிலையிலும் பிறந்தார் என்பதை மக்களுக்கும் திருஅவைக்கும் உணர்த்த விரும்பினார்.' இதன் காரணமாக திருத்தந்தை ஹொனோரியுஸின் அனுமதி பெற்று, பெத்லகேம் காட்சியை தத்ரூபமாக உயிருள்ள விலங்குகளைக் கொண்டும். மனிதர்களைக் கொண்டும், நடத்திக்காட்டினார். இது மக்களை பெரிதும் கவர்ந்தது. பல நாடுகளுக்கும் இது பரவலாயிற்று.


கிறிஸ்துமஸ் தாத்தா 

கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சான்டகிளாஸ் துருக்கி நாட்டில் பாதராவில் (Patara) மார்ச் 15, 270-ல் பிறந்தார். சிறுவர்களுக்கும், ஏழைகளுக்கும் சிறு வயது முதலே இரக்கம் காட்டி உதவி செய்து வந்த இவரை உரோமை அரசு சிறைப்பிடித்து கொடுமைக்கு ஆளாக்கியது. எனினும் கான்ஸ்டன்டைன் மன்னர் உரோமை பேரரசரான போது புனித நிக்கோலாஸை விடுவித்தார். கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மாறி 325-ஆம் ஆண்டில் நீசே பொதுச் சங்கத்தைக் கூட்டினார். அதற்கு புனித நிக்கோலாஸ் அழைக்கப்பட்டார். பின்னர் ஆசியா மைனரில் 'மீரா' (Myra) நகர ஆயராக நியமிக்கப்பட்டார். வறுமை, ஏழ்மையில் வாடுவோர் யார் யார் என்று கண்டு, இரவு நேரங்களில் அவர்கள் வீடுகளில் ஒரு பொட்டலத்தை போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிடுவார். மறுநாள் அவ்வீடுகளில் ஏற்படும் மகிழ்ச்சி ஏராளமாய் இருக்கும். இது யார் என்று மக்கள் கண்டுபிடிக்க முயன்று இறுதியில் தங்கள் ஆயர் நிக்கோலாஸ்தான் என்று அறிந்தனர். இவ்வாறுதான் ஏழைகளுக்கும். சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கும் பழக்கம் உண்டானது. இவ்வாறு 'ஏழைகளின், சிறுவர்களின் ஆயர்' என்று அழைக்கப்பட்ட புனித நிக்கோலாஸ் தனது 73-ஆம் வயதில் டிசம்பர் 6, 343-ல் இறந்தார்.

ரஷ்யா அவரைப் பாதுகாவலராக ஏற்றது. திருத்தூதர்களைவிட இவர் பெயரில் அதிக ஆலயங்கள் எழுந்தன. பல நாடுகளுக்கும் சென்ற டச்சு மாலுமிகள் ஆயரின் இரக்கத்தைப் பலருக்கும் அறிவித்து, அவரது திருவிழா நாளான டிசம்பர் 6-இல் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இவ்வாறுதான் 'கிறிஸ்துமஸ் தாத்தா தினம்' அனுசரிக்கப்படுகிறது. இவ்வாறு சிறுவர்கள் செய்த கற்பனைப் படைப்புதான் வெண்தாடியுடன் வெள்ளைக் குதிரையில் வரும் St. Nicholas. குழந்தைகளுக்கு கூடை நிறைய பரிசும் குறும்புக் காரர்களுக்கு தட்டைக் குச்சியும் கொணர்வார். இலத்தீன் மொழியிலுள்ள 'சாங்துஸ் நிக்கோலாஸ்' என்பதுதான், டச்சு மற்றும் சில மொழிகளில் 'சாங்தா கிளாஸ் - ஆக மாறிவிட்டது. டச்சுக்காரர்கள் சென்ற இடமெல்லாம் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர். 

கிபி. 1881-ம் ஆண்டு கார்டூன் வரையும் தாமஸ் நாஸ்ட் என்பவர் தான் வெள்ளை சிகப்பு உடுப்புடன், தலையில் தொப்பி, கையில் தடி மற்றும் பரிசு பொருட்களுடன் கூடிய கிறிஸ்துமஸ் தாத்தாவை வரைந்தார். அது மிகவும் பிரபலமடைந்து இன்று எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது .

இவர் ஜெர்மனியில் வேறொரு தோற்றத்தில் காணப்பட்டார். 'தோர்' என்ற பெயருடன் நெருப்பின் ஊற்றாகவும், இரதத்தில் பயணம் செய்து பனிக்கட்டி அரக்கர்களை வீழ்த்தி அனைவரையும் காப்பவராகவும் கற்பனை செய்யப்பட்டார். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அடுப்படிதான் அவர் உறையும் புனித இடம். அவர் புகைபோக்கி வழியாக வருவார், போவார். இவரையே கம்பளி ஓரம் கொண்ட சிகப்புக் கோட்டு அணிந்து வெண் தாடியுடன், எட்டு கலைமான்கள் இழுக்கிற பனிக்கட்டி வண்டிமீது அமர்ந்து அன்பளிப்புடன் வருவதாக கற்பனை செய்தனர். இவர் குழந்தைகளைத் திருத்தி கிறிஸ்துமஸ் விழாவுக்குத் தயார் செய்வார்.

இவ்வாறு, கிறிஸ்து பிறப்பு விழாவில் பாலன் இயேசு அளிக்கும் அன்புப் பரிசின் சிறந்த அடையாளம் கிறிஸ்மஸ் தாத்தா. நாம் ஒருவருக்கு ஒருவர் அன்புப் பரிசுகள் வழங்க வேண்டும் என்பதே இத்தாத்தாவின் எண்ணமும் எதிர்பார்ப்பும்.


கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரம் மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்றொருவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததாகச் சாடியும் எதிர்த்தும் வந்தார். ஊர் ஊராகச் சென்று இதற்காக பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றைமக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்டும் துளிர்த்து விடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.

ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக்கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக பார்க்கத் தொடங்கினர். போனிபேஸ் மீண்டும் அவ்வழியே சென்றபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் 'உயிர்ப்பின் அடையாளமாக' இடம்பெறத் தொடங்கியது.

அன்று முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய அங்கமாக மாறி விட்டதாகவும், இதனால் ஜெர்மனியே கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இவை ஒருபுறமிருக்க, 15-ம் நூற்றாண்டுகளில் டிசம்பர் 24-ம் நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் காலத்தை நினைவுகூரும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள் என்றும், இதுவே பிறகு கிறிஸ்துமஸ் மரமாக மாறியது என்றும் தகவல்கள் உள்ளன.

அதோடு, கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது அந்த மரத்தின் சிறப்பம்சம். அதேபோல கிறிஸ்துமஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் இயேசுவின் மூன்று பரிமாணங்களைக் குறிப்பதாகவும், எனவே, இயேசு மனிதம் உருவான நாளை, மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடுவது அதிக அர்த்தமுடையது என்ற விளக்கங்களும் சொல்லப் படுகின்றன.

12-ம் நூற்றாண்டு காலங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் தலைகீழாகக் கட்டித் தொங்க விடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் ஆரம்ப காலத்தில் சுமார் நான்கடி உயரமான கிறிஸ்துமஸ் மரங்களையே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

1521-ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனாதனது திருமணத்துக்குப்பிறகு ஒரு கிறிஸ்துமஸ்மரத்தை பாரீஸ் நகருக்குகொண்டு வந்து விழா கொண்டாடியதே அந்நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துமஸ் மரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்துமஸ் மரத்தைமுதலில் வீடுகளுக்குள்ளும் அனுமதித்தவர்கள்.

இங்கிலாந்து அரசி விக்டோரியா அடிக்கடி ஜெர்மனி நாட்டுக்குப் பயணம் செய்வதுண்டு. அவருக்கு ஜெர்மனி நாட்டு இளவரசர் ஆல்பர்ட் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொண்ட இருவரும் இங்கிலாந்து திரும்பினார்கள். 1841-ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்துமஸ் மரத்தின் இங்கிலாந்து பிரவேசம் என்ற கதையும் உண்டு.


கிறிஸ்துமஸ் கேரல்ஸ்


கேரல் என்ற சொல் சாக்ஸன் மொழியில் இருந்து வருகிறது. இந்தச் சொல்லின் அர்த்தம், சுற்றி இருந்து கொண்டு ஆடிய வண்ணம் பாடுவது. நான்காம் நூற்றாண்டில் உரோமையில் கிறிஸ்துமஸ் பாடலானது முதன் முதலாக பாடப்பட்டது. கி.பி. 9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் வடக்கு ஐரோப்பிய துறவிகளின் மடங்களில் கிறிஸ்துமஸ் பாடல் தொடங்கப்பட்டது. இதை ஒருங்கிணைத்தவர் பெர்னார்டு. 

கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டிலும் கிறிஸ்துமஸ் பாடல்களும், கீதங்களும் பாடப்பட்டன. கி.பி. 13-ம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ் அசிசியார் குடில் அமைத்து கதாபாத்திரங்களை விளக்கி கூறும் நேரத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன. இதன் வாயிலாக பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகளில் அவரவர் மொழிகளில் கிறிஸ்துமஸ் பாடலானது பிரபலமடைந்தது. கி.பி. 1426-ம் ஆண்டு ஜாண் ஆட்லி அவர்களால் கிறிஸ்துமஸ் பாடலானது வீடுவீடாக சென்று பாடப்பட்டது.

கி.பி. 1816-ம் ஆண்டு அருட்தந்தை, ஜோசப்மோரால் எழுதப்பட்ட அமைதியான நள்ளிரவு (Silent Night) என்ற பாடல் மிகமிக பிரபலமடைந்து இன்று வரை பாடப்பட்டு வருகிறது.

அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரவு)
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்

கிபி. 1857-ம் ஆண்டு 'ஜிங்கில் பெல்ஸ்' என்ற பாடலானது ஜேம்ஸ் பையர்பாயிண்ட் அவர்களால் இயற்றப்பட்டது. அதன்பின் 'ஜாய் டு த வேல்டு' (உலகிற்கு மகிழ்ச்சி) என்ற பாடல் இயற்றப்பட்டது. இவ்வாறு கிறிஸ்துமஸ் பாடல்களானது ஏராளமாக எழுதப்பட்டு பாடப்பட்டது.


கிறிஸ்துமஸ் விண்மீன்


கிறிஸ்மஸ் நட்சத்திரம் பெத்லகேமின் நட்சத்திரத்தை குறிக்கிறது, இது மூன்று ஞானிகளை குழந்தை இயேசுவை நோக்கி வழிநடத்தியது. நீண்ட காலத்திற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட ஒரு இறைவாக்கின் விண்ணக அடையாளமாகவும், மனித இனத்தின் ஒளிரும் எதிர்நோக்காகவும் உள்ளது.


கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை


18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹென்றி கோல் ஒரு அருங்காட்சியக இயக்குநராக இருந்தவர். மிகவும் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை வெளிக் கொணர்வதில் ஆர்வமுள்ளவரான இவர் தமது நண்பர்களுக்கு வரலாற்றின் சில சிறு குறிப்புகளை அனுப்பி வந்தார். அதன் விளைவாக 1843-ஆம் ஆண்டு தனது நண்பரும் ஓவியருமான ஜான் ஹார்ஸ்லி என்பவரிடம் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு உருவாக்கித் தரும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு உருவானவையே வாழ்த்து மடல்கள்..! இவர் சுமார் 1000 வாழ்த்து மடல்களை அச்சிட்டு அனுப்பி வைத்தார். அதில் இயேசுவின் பிறப்பு, பெத்லகேம் விண்மீன், வானதூதர்கள் போன்றவை இடம் பெற்றன. 


கிறிஸ்துமஸ் மர ஒளி விளக்குகள்

16ஆம் நூற்றாண்டில் மார்டின் லூதர் முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரத்தை ஒளி விளக்குகளால் அலங்கரித்தார். அவர் ஒரு நாள் காட்டில் நடந்து செல்கையில் மரங்களுக்கிடையே இருக்கும் இடைவெளிகள் வழியாக ஒளிரும் அழகான விண்மீன்களைப் பார்த்து நெகிழ்ந்து இரசித்ததாகவும், வீடு திரும்பியதும் தன் வீட்டில் மரம் அமைத்து அதை எரியும் மெகுதிரிகளால் அலங்கரித்ததாகவும் மரபு வழிக் கதை சொல்லப்படுகிறது.


கிறிஸ்துமஸ் மணிகள்

கிறிஸ்துமஸ் மணிகளுக்கும் அறிய வரலாறு உண்டு. கிறிஸ்தவ மரபிலும் புற இனத்தாரின் மரபிலும் தீய ஆவிகளை விரட்டுவதற்காக மணிகள் பயன்படுத்தப்பட்டன. கிறிஸ்து பிறப்பு போன்ற முக்கியமான நிகழ்வுகளைக் குறிக்கவும் அல்லது திருப்பலிக்கு நேரம் ஆயிற்று என்று ஆலயத்திற்குச் செல்வோருக்குத் தெரியப்படுத்தவும் ஆலய மணிகள் அடிக்கப்படுகின்றன. ஆனால் கிங்கினி மணிகள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனம் வருகிறது என்பதை சுட்டிக்காட்ட பயன்படுகின்றன.


கிறிஸ்துமஸ் கேன்டிகேன் (சர்க்கரை மிட்டாய்)


இதற்கு ஒரு மரபு வழி கதை உண்டு. நீண்ட கிறிஸ்துமஸ் திருப்பலிகளின் போது பாடகர் குழு சிறுவர்களை ஆக்கிரமிப்பதற்காக ஒரு பாடகர் குழு ஆசிரியரால் முதன்முதலில் அவை கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் இயேசுவை பின்பற்றுபவர்களுக்கு அவரை ஒரு நல்ல மேய்ப்பராக அடையாளப்படுத்த ஒரு மேய்ப்பனின் வளைந்த கோல் வடிவத்தில் இவை செய்யப்டுகின்றன.


திருவருகைக்காலம் ஒரு முன்னோட்டம்

 திருவருகைக்காலம் ஒரு முன்னோட்டம்

திருவழிபாட்டு ஆண்டு என்பது திருவழிபாட்டிற்காக திருநாட்களையும் சடங்குகளையும் கணித்து, வகுத்து திரு அவை ஏற்படுத்தியிருக்கும் காலச் சுழற்சி ஆகும். ஓர் ஆண்டு காலச் சுழற்சிக்குள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, வாழ்வு, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகிய மீட்பளிக்கும் பாஸ்கா மறைநிகழ்வுகள் நினைவு கூரப்பட்டு கொண்டாடப்படுகின்றன. 

திருவழிபாட்டு ஆண்டானது ஆறு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. இவை முறையே: திருவருகைக்காலம், கிறிஸ்து பிறப்பு காலம், திருக்காட்சிப் பெருவிழாவுக்குப் பின்வரும் பொதுக்காலம், தவக்காலம், பாஸ்கா காலம், ஆண்டின் பொதுக்காலம். இது திருவருகைக்கால முதல் ஞாயிறு அன்று தொடங்கி கிறிஸ்து அரசர் பெருவிழாவுக்குப் பின்வரும் சனிக்கிழமை அன்று முடிவடைகின்றது. 


திருவருகைக் காலம் என்றால் என்ன?

திருவருகைக்காலம் என்ற வார்த்தை 'யுனஎநவெ' என்ற ஆங்கில வார்த்தையின் தமிழாக்கமாகும். இது 'வருகை' எனப் பொருள்படும் 'யுனஎநவெரள' (அத்வெந்துஸ்)' என்கிற லத்தின் வார்த்தையிலிருந்து பிறந்தது. இதனை பழைய தமிழ் வழக்கில் 'ஆகமன காலம்' என்பர். 

திருவருகைக் காலத்துக்கு இரு பண்புகள் உள்ளன: இறைமகன் மனிதரிடையே முதல் முறை வந்ததை நினைவுகூரும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் தயாரிப்புக் காலம் ஆகும்; அவ்வாறே காலத்தின் நிறைவில் நிகழும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்பார்த்திருக்க உள்ளங்கள் தூண்டப்படும் காலமும் அதுவே. இவ்விரு காரணங்களால் திருவருகைக் காலம் இறைப்பற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்பார்ப்பின் காலமாக விளங்குகின்றது. இது நவம்பர் 30-ஆம் நாளில் அல்லது அதற்கு அண்மையில் வரும் ஞாயிற்றுக்கிழமை, முதல் மாலைத் திருப்புகழோடு தொடங்கி, கிறிஸ்து பிறப்பு விழாவின் முதல் மாலைத் திருப்புகழுக்குமுன் முடிவடையும். (வழிபாட்டு பொது விதிமுறை எண். 39, 40)

திருவருகைக்காலம் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவுக்கு முந்தைய நான்கு வார காலமாகும். கிறிஸ்தவ திருஅவையின் புது வருடம் திருவருகைக்கால முதல் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து தொடங்குகிறது. இது இயேசு கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவிற்காக தகுதியான முறையில் நம்மை தயாரித்து கொண்டாட அழைக்கும் காலம். இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நினைவுபடுத்தி அதை எதிர்நோக்கி நம்மை தயாரித்துக் கொள்ள இது நம்மைத் தூண்டுகிறது.

கத்தோலிக்கத் திரு அவையின் மறைக்கல்வி நூல் திருவருகைக் காலத்தின் இரு நோக்கங்களை இவ்வாறு எடுத்துரைக்கிறது:

'ஒவ்வொரு ஆண்டும் திரு அவை திருவருகைக்கால வழிபாட்டைக் கொண்டாடும் போது முற்காலத்தில் மெசியாவின் வருகைக்காக மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பை நம் கண்முன் நிறுத்துகிறது. மீட்பரின் முதல் வருகைக்கான தயாரிப்பில் பங்கேற்பதன் வாயிலாக கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் இயேசுவின் இரண்டாம் வருகைக்கான தங்கள் ஆர்வத்தைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்' (க.தி.ம. எண் 524).


கிறிஸ்துமஸ் - பெயர்க்காரணம்

மத்திய காலத்திலிருந்து தான் கிறிஸ்துவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒரு சிறப்புத் திருப்பலி மூலம் நள்ளிரவில் நிறைவேற்றும் வழக்கம் ஆரம்பித்தது. நள்ளிரவில் திருப்பலி நடத்துவது கிறிஸ்து பிறப்பு நாளில் மட்டுமே கொண்டாடப்பட்டது. இந்த திருப்பலியை 'ஊhசளைவ ஆயளள' அதாவது 'கிறிஸ்துவின் திருப்பலி' என்று அழைக்கப்பட்டது. இதுவே நாளடைவில் 'கிறிஸ்துமஸ்' ஆக மருவியது.


கிறிஸ்துமஸ்: ஒரு வரலாற்றுப் பார்வை

கிறிஸ்துமஸ் தோன்றிய வரலாற்றை பற்றி அலசிப் பார்க்கும் பொழுது பல விதமான யூகங்கள் இடர்பட்டாலும் இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பது ஒரு சரித்திர சான்று, அதை யாராலும் மறுக்க இயலாது. 

உரோமை அரசர் அவூரேலியுஸ் என்பவர் கி.பி. 274ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் தேதியை சூரிய கடவுளுக்கான விழாவாக கொண்டாட ஆணையிட்டான். நான்காம் நூற்றாண்டில் அரசர் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவ மதத்தை உரோமை அரச மதமாக மாற்றியதன் காரணமாக அக்காலத்தில் வாழ்ந்த அனைத்து புற இன மக்களின் விழாக்களும் கிறிஸ்தவ சாயலை ஏற்றன. அதன்படி, சூரியப் பெருவிழாவான டிசம்பர் 25ஆம் தேதி இயேசுவின் பிறப்பு விழாவாக மாற்றங்கண்டு 336ஆம் ஆண்டில் முதன் முதலில் கிறிஸ்துமஸ் விழாவானது கொண்டாடப்பட்டது.. அதனை திருத்தந்தை முதலாம் ஜீலியஸ் அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

ஆனால் 'உரோமையர்களின் கலைக்களஞ்சியம்' என்ற நூலில், அகுஸ்துஸ் சீசர் பேரரசராக இருந்தபோது டிசம்பர் மாதம் 25-ம் நாள், அதாவது அம்மாவாசையிலிருந்து 15 நாட்களுக்கு பிறகு வந்த வெள்ளியன்று இயேசு பிறந்தார் என குறிப்பிடப்படுகின்றது. பல நூல்கள் தரும் விளக்கங்களை பார்க்கும் பொழுது கான்ஸ்டன்டைன் காலத்திற்கு முன்பாகவே கிறிஸ்துமஸ் விழா டிசம்பர் மாதம் 25-ம் நாள் கொண்டாடப்பட்டது என கருதப்படுகிறது. 

உரோமை ஆயர் லிபெரியஸ் என்பவர் கி.பி. 354-இல் கிறித்தவர்களுக்கு விடுத்த ஆணையில் டிசம்பர் 25-ஆம் தேதியை இயேசுவின் பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்று கட்டளைப் பிறப்பித்தார். இவ்வாறாக, உரோமை குலதெய்வங்களின் வழிபாட்டிற்குப் போட்டியாக, அதே நாளில் அதாவது டிசம்பர் 25-ஆம் நாளன்று இவ்விழாவைச் சிறப்பிக்க திரு அவை தீர்மானித்தது. எகிப்து, பாலஸ்தீனம், எருசலேம் ஆகிய திரு அவைகளும் காலப்போக்கில் இதனை ஏற்றுக்கொண்டன.


ஏன் டிசம்பர் 25?  

உரோமையர்கள், கிரேக்கர்கள் தங்களின் அரசர்களுக்கும் ஆளுநர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் பிறந்தநாள் கொண்டாடுவது மரபு. இதற்குச் சான்று ஏரோதின் பிறந்த நாள் விழா (மத் 14:6). ஒவ்வோர் ஆண்டும் உரோமையில் 'சூரியனின் பிறப்பு விழா' டிசம்பர் 25-ஆம் நாளில் கிறிஸ்தவர்கள் அல்லாத உரோமையர்களால் கொண்டாடப்பட்டு வந்தது. அப்போது உரோமையை ஆண்டு வந்த அரசர் அவூரேலியுஸ் என்பவர் பால்மியூரா மன்னனை வெற்றி கொண்டதின் நினைவாக, கி.பி. 274ஆம் ஆண்டு சூரியக் கடவுளை பாதுகாவலாக அறிக்கையிட்டு, டிசம்பர் மாதம் 25ஆம் தேதியை சூரிய கடவுளுக்கான விழாவாக கொண்டாட ஆணையிட்டான். கிறிஸ்து மட்டுமே உண்மையான 'உலகின் ஒளி' (யோவா 8:12) என்று நம்பிய கிறிஸ்தவர்களுக்கு இது ஈர்ப்பைக் கொடுத்தது. அதிலிருந்து கிறிஸ்தவர்களை காக்க உரோமை திரு அவையானது கிறிஸ்து பிறப்பு விழாவை அந்நாளிலேயே கொண்டாடத் தொடங்கியது.

வரலாற்று ஏடுகளை பார்க்கிறபோது, புனித ஜான் கிறிஸ்சோஸ்தோம் கிறிஸ்து உண்மையில் டிசம்பர் 25-இல் பிறந்தார் என்று குறிப்பிடுகிறார். இவரது ஆய்வுப்படி, செக்கரியா ஆலயத்தில் பணி செய்து கொண்டிருந்த நாள், பாவப் பரிகார நாள் (Day of Atonement), செப்டம்பர் 24, அன்றுதான் கோடைக்கால சூரியனுக்கு விழாவும் கொண்டாடப்பட்டது. இன்று பகல் குறைந்திருக்கும் ஆதலால், ஜான் கிறிஸ்சோஸ்தோம் கூற்றை அடித்தளமாக வைத்து, 'அவர் வளரவும், நாள் குறையவும்' என்பதற்கொப்ப, செப்டம்பர் 24-இல் திருமுழுக்கு யோவான் கருவாகி ஜூன் மாதம் 24-இல் பிறந்தார். திருமுழுக்கு யோவான் பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்கள் கணக்கிட்டால் டிசம்பர் 25. ஏனெனில், மரியாவுக்கு தூதர் வாழ்த்துக் கூறி சம்மதம் கேட்டபோது, எலிசபெத்திற்கு ஆறாம் மாதம் (லூக் 1:36). 

மேலும் திரு அவையின் தந்தையர்கள் மார்ச் மாதம் 25-ம் தேதி கபிரியேல் தூதர் மரியாளுக்கு தூதுரை சொல்லியிருக்க வேண்டும் என்று பதிவு செய்கிறார்கள். அந்நாளை யூதச் சமூகத்தினர் சிலரும், முதல் கிறிஸ்தவ பாரம்பரியங்களும், படைப்பின் முதல் நாளாக கருதி வந்ததுமுண்டு. ஆகவே அந்நாளிலிருந்து சரியாக ஒன்பது மாதங்கள் கழிந்து அதாவது டிசம்பர் 25ம் தேதி இயேசு பிறந்திருக்க வேண்டும் என கருதினார்கள்.

ஆனால் வரலாற்றை சிறிது அலசிப் பார்க்கும் போது கிழக்கத்திய திரு அவையினர் இன்றும் இயேசுவின் பிறப்பை சனவரி ஆறாம் தேதி கொண்டாகின்றனர். 


வரலாற்றில் திருவருகைக்காலம்   

இவ்வாறு கிறிஸ்துமஸ் விழாவின் உட்பொருளை உய்த்துணர்ந்த மக்கள், இதனை தகுதியுள்ள விதத்தில் கொண்டாடத் தொடங்கினர். தங்களையே பக்குவப்படுத்தி, மீட்பின் மறைபொருளை வாழ்ந்து காட்ட, தங்களையே தயாரித்துக் கொண்டனர். இதனை முன்னிட்டு கிறிஸ்துமஸ் விழாவுக்கான தயாரிப்பு காலமாக திருவருகைக்காலம் வழங்கப்பட்டு வந்தது.  மக்களின் நம்பிக்கை வாழ்வில் மலர்ந்த இத்தயாரிப்பு ஒவ்வொரு நாட்டிலும் மாறுபட்டு இருந்தாலும், அதன் கருப்பொருள் மாறவில்லை.

நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் நாட்டில் காணப்பட்ட மரபுப்படி தூர் நகர ஆயர் பெர்பெத்துஸ் (461-490) என்பவரின் வழிகாட்டுதலின் பேரில் கிறிஸ்து பிறப்பு விழாவிற்காக நாற்பது நாட்கள் தயாரிப்பு இருந்தது. இது நவம்பர் 11-ஆம் நாள் தூர் நகர் புனித மார்டின் விழாவிலிருந்து தொடங்கி, 7 வாரங்கள் அடங்கிய தயாரிப்புக் காலத்தில் பல்வேறு நோன்புகள் கடைப்பிடிக்கப்பட்டு சனவரி 6ஆம் தேதி நிறைவடையும். எனவே, இதை மார்ட்டீனின் நோன்புக் காலம் என்றும் அழைத்தனர். இதில் வாரத்தின் இறுதி நாட்கள் தவிர 40 நாட்கள் கால அளவில் நோன்பு கடைப்பிடிக்கப்படும். இது இயேசுவின் பாலைவன அனுபவத்தையும் தவக்காலத்தின் முன் தயாரிப்பையும் அடையாளப்படுத்துகின்றதாக அமைந்தது. 

ஆறாம் நூற்றாண்டில் திருவருகைக்காலம் ஒழுங்குமுறைக்குள் வந்தது. நோன்பிருத்தல், திருப்பலியில் பங்கேற்றல் போன்றவற்றை வலியுறுத்தி திருத்தந்தை பெரிய கிரகோரியார்; (590-604) அவர்கள் திருவருகைக்கால திருவழிபாட்டு முறையை நான்கு வார தயாரிப்பாக அமைத்துத் தந்தார்.

பின்னர் ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சி செலுத்திய பேராசர் சார்லஸ் தயாரிப்புக் காலத்தை நான்கு வாரமாகக் குறைத்தார். இவ்வாறு நோன்பின் பண்புகளை இத்தயாரிப்புக் காலம் ஏற்றதால்தான் மகிழ்ச்சிப் பண்பை உணர்த்தும் 'உன்னதங்களிலே' என்ற பாடலைப் பாடுவதைத் தவிர்த்தனர். அதன் விளைவாக நோன்புத் தன்மையைக் குறிக்கும் ஊதா நிற திருவுடையை குருக்கள் அணியும் வழக்கம் வந்தது.                          

திருவருகைக் காலத்தின் இரண்டு பகுதிகள்

திருவருகைக்காலம் இரண்டு பகுதிகளாக, முதலாவது திருவருகைக்காலம் என்றும் இரண்டாம் திருவருகைக்கால என்றும் வழங்கப்படுகிறது. 

  1. திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு முதல் டிசம்பர் 16 வரை இயேசுவின் இரண்டாம் வருகையை இறைவேண்டல்களும் விவிலிய வாசகங்களும் நமக்கு நினைவுட்டுகின்றன. 
  2. டிசம்பர் 17 தொடங்கி 24 முடிய உள்ள நாட்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவின் தயாரிப்புக் காலமாக உள்ளது. இதில் பெரும்பாலும் இயேசுவை இவ்வுலகிற்கு கொண்டு வர தன் கருப்பையை ஆலயமாக்கிய அன்னை மரியா மையப்பொருளாகிறார். 

திருவருகைக் கால வட்டம்

திருவழிபாட்டின் காலமாகிய கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை ஒரு தனி வட்டமாக எடுத்தால் அதில் மூன்று சிறு காலங்கள் இடம் பெறும். 
1. திருவருகைக் காலம், 
2. கிறிஸ்து பிறப்பு, 
3. ஆண்டவருடைய திருக்காட்சி பெருவிழா வரையிலான கிறிஸ்து பிறப்புக் காலம். 

இக்காலங்களால் நாம் நன்கு பலனடைய வேண்டுமானால் இக்காலத்தின் திருவழிபாட்டின் அர்த்தத்தை நன்றாக கவனிக்க வேண்டும். மீட்பரின் வருகைக்காக மக்கள் எதிர்பார்த்திருந்ததை திருவருகைக்காலம் நமக்கு நினைவுபடுத்தினாலும் அம்மக்களைப் போல் நாம் இன்றைய காலத்தில் எதிர்பார்த்திருப்பதில்லை. ஏனெனில் கிறிஸ்து எனும் மீட்பர்  ஏற்கெனவே வந்துவிட்டார். எனவே கிறிஸ்துவின் முதல் வருகைக்காக எதிர்பார்த்திருந்ததுபோல் கிறிஸ்து நீதியின் அரசராக தன் முழு மாட்சியில் வரும் அவரது இரண்டாம் வருகைக்காக எதிர்நோக்கி இருக்க வேண்டும் என்று இக்காலம் வலியுறுத்துகிறது. 

கிறிஸ்து பிறப்பு விழாவானது மனிதனாய் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கிறிஸ்து இக்காலத்தில் நமது உள்ளங்களில் பிறந்திருப்பதை நினைவூட்டுகிறது. கிறிஸ்து பிறப்பை அவருடைய சிலுவைச் சாவோடு இணைத்துப் பார்க்கும்போதுதான் கிறிஸ்து பிறப்பு விழாவின் உண்மையான பொருள் புலப்படும். சிலுவையின்றி குடில் இல்லை - சிலுவைச் சாவின்றி கிறிஸ்து பிறப்பு இல்லை - கல்வாரியின்றி பெத்லகேம் இல்லை. நாம் பிறந்தது வாழ்வதற்கு. கிறிஸ்து பிறந்ததோ சாவதற்கு. அவரது இறப்பில் நாம் பிறக்கிறோம். 

கிறிஸ்து பிறந்த திருவிழாவுக்குப் பின் ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா முக்கிய இடம் பெறுகிறது. இத்திருவிழா கிரேக்க மொழியில் 'எப்பிபானியா' (Epiphania) என்று அழைக்கப்படுகிறது. இப்பெயருக்கு 'வெளிப்படுத்துதல்' அல்லது 'காட்டுதல்' என்று பொருள். மூன்று அரசர்கள் என்று அழைக்கப்படும் ஞானிகளுக்குக் கிறிஸ்து தன்னைக் வெளிப்படுத்துகிறார். எல்லாத் திசை மக்களுக்கும் இவர் ஒருவரே அரசர், கடவுள், இவரைத் தவிர வேறு மீட்பர் இல்லை என்பதை இந்நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. இக்காலத்தில் திரு அவை இயேசுவின் வருகையை மூன்று வழிகளில் நினைவுகூர்கிறது. 
  • இயேசுவின் பிறப்பு எனும் முதல் வருகை (வரலாற்று வருகை) 
  • கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களின் இதயங்களில் இயேசுவின் வருகை (வாழ்வில் வருகை) 
  • இயேசுவால் வாக்களிக்கப்பட்ட அவரது இரண்டாம் வருகை (மாட்சிமிகு வருகை) 
திருவருகைக் காலத்தின்; நான்கு ஞாயிறுகள் 

தொடக்கத்தில் ஆறு வாரங்கள் நீடித்த திருவருகைக் காலக் கொண்டாடத்தை திருத்தந்தை முதலாம் கிரகோரி நான்கு வாரங்களாக மாற்றினார். மீட்;பரின் வருகைக்காக நான்காயிரம் ஆண்டுகளாக மக்கள் காத்திருந்ததை நான்கு ஞாயிறுகள் குறிக்கின்றன. 

அ) ஆதாம் முதல் நோவா வரை – 1000 ஆண்டுகள் 
ஆ) நோவா முதல் ஆபிரகாம் வரை - 1000 ஆண்டுகள் 
இ) ஆபிரகாம் முதல் தாவீது வரை - 1000 ஆண்டுகள் 
ஈ) தாவீது முதல் புதிய ஆதாம், கிறிஸ்து வரை - 1000 ஆண்டுகள் 

மையக் கருத்துக்கள்:

வாரம் மையக்கருத்து நினைவு
1 எதிர்நோக்கு மூதாதையர்
2 அமைதி இறைவாக்கினர்
3 மகிழ்ச்சி திருமுழுக்கு யோவான்
4 அன்பு இயேசுவின் தாய் மரியா
- உலகின் ஒளி இயேசு கிறிஸ்து