திருவருகைக் கால அடையாளங்கள்
கிறிஸ்துமஸ் குடில்
நான்காம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட கிறிஸ்துமஸ் விழா நாளடைவில் வீண் ஆடம்பரத்துக்கும் பகட்டு விளம்பரங்களுக்கும் உள்ளானது. ஆகவே 1224ஆம் ஆண்டு அசிசி நகர் புனித பிரான்சிஸ் 'இயேசு ஏழ்மையிலும் வறுமையிலும் புறக்கணிப்பட்ட சூழ்நிலையிலும் பிறந்தார் என்பதை மக்களுக்கும் திருஅவைக்கும் உணர்த்த விரும்பினார்.' இதன் காரணமாக திருத்தந்தை ஹொனோரியுஸின் அனுமதி பெற்று, பெத்லகேம் காட்சியை தத்ரூபமாக உயிருள்ள விலங்குகளைக் கொண்டும். மனிதர்களைக் கொண்டும், நடத்திக்காட்டினார். இது மக்களை பெரிதும் கவர்ந்தது. பல நாடுகளுக்கும் இது பரவலாயிற்று.
கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சான்டகிளாஸ் துருக்கி நாட்டில் பாதராவில் (Patara) மார்ச் 15, 270-ல் பிறந்தார். சிறுவர்களுக்கும், ஏழைகளுக்கும் சிறு வயது முதலே இரக்கம் காட்டி உதவி செய்து வந்த இவரை உரோமை அரசு சிறைப்பிடித்து கொடுமைக்கு ஆளாக்கியது. எனினும் கான்ஸ்டன்டைன் மன்னர் உரோமை பேரரசரான போது புனித நிக்கோலாஸை விடுவித்தார். கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவராக மாறி 325-ஆம் ஆண்டில் நீசே பொதுச் சங்கத்தைக் கூட்டினார். அதற்கு புனித நிக்கோலாஸ் அழைக்கப்பட்டார். பின்னர் ஆசியா மைனரில் 'மீரா' (Myra) நகர ஆயராக நியமிக்கப்பட்டார். வறுமை, ஏழ்மையில் வாடுவோர் யார் யார் என்று கண்டு, இரவு நேரங்களில் அவர்கள் வீடுகளில் ஒரு பொட்டலத்தை போட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் சென்றுவிடுவார். மறுநாள் அவ்வீடுகளில் ஏற்படும் மகிழ்ச்சி ஏராளமாய் இருக்கும். இது யார் என்று மக்கள் கண்டுபிடிக்க முயன்று இறுதியில் தங்கள் ஆயர் நிக்கோலாஸ்தான் என்று அறிந்தனர். இவ்வாறுதான் ஏழைகளுக்கும். சிறுவர்களுக்கும் பரிசுகள் வழங்கும் பழக்கம் உண்டானது. இவ்வாறு 'ஏழைகளின், சிறுவர்களின் ஆயர்' என்று அழைக்கப்பட்ட புனித நிக்கோலாஸ் தனது 73-ஆம் வயதில் டிசம்பர் 6, 343-ல் இறந்தார்.
ரஷ்யா அவரைப் பாதுகாவலராக ஏற்றது. திருத்தூதர்களைவிட இவர் பெயரில் அதிக ஆலயங்கள் எழுந்தன. பல நாடுகளுக்கும் சென்ற டச்சு மாலுமிகள் ஆயரின் இரக்கத்தைப் பலருக்கும் அறிவித்து, அவரது திருவிழா நாளான டிசம்பர் 6-இல் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இவ்வாறுதான் 'கிறிஸ்துமஸ் தாத்தா தினம்' அனுசரிக்கப்படுகிறது. இவ்வாறு சிறுவர்கள் செய்த கற்பனைப் படைப்புதான் வெண்தாடியுடன் வெள்ளைக் குதிரையில் வரும் St. Nicholas. குழந்தைகளுக்கு கூடை நிறைய பரிசும் குறும்புக் காரர்களுக்கு தட்டைக் குச்சியும் கொணர்வார். இலத்தீன் மொழியிலுள்ள 'சாங்துஸ் நிக்கோலாஸ்' என்பதுதான், டச்சு மற்றும் சில மொழிகளில் 'சாங்தா கிளாஸ் - ஆக மாறிவிட்டது. டச்சுக்காரர்கள் சென்ற இடமெல்லாம் இப்பழக்கத்தை ஏற்படுத்தினர்.
கிபி. 1881-ம் ஆண்டு கார்டூன் வரையும் தாமஸ் நாஸ்ட் என்பவர் தான் வெள்ளை சிகப்பு உடுப்புடன், தலையில் தொப்பி, கையில் தடி மற்றும் பரிசு பொருட்களுடன் கூடிய கிறிஸ்துமஸ் தாத்தாவை வரைந்தார். அது மிகவும் பிரபலமடைந்து இன்று எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது .
இவர் ஜெர்மனியில் வேறொரு தோற்றத்தில் காணப்பட்டார். 'தோர்' என்ற பெயருடன் நெருப்பின் ஊற்றாகவும், இரதத்தில் பயணம் செய்து பனிக்கட்டி அரக்கர்களை வீழ்த்தி அனைவரையும் காப்பவராகவும் கற்பனை செய்யப்பட்டார். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள அடுப்படிதான் அவர் உறையும் புனித இடம். அவர் புகைபோக்கி வழியாக வருவார், போவார். இவரையே கம்பளி ஓரம் கொண்ட சிகப்புக் கோட்டு அணிந்து வெண் தாடியுடன், எட்டு கலைமான்கள் இழுக்கிற பனிக்கட்டி வண்டிமீது அமர்ந்து அன்பளிப்புடன் வருவதாக கற்பனை செய்தனர். இவர் குழந்தைகளைத் திருத்தி கிறிஸ்துமஸ் விழாவுக்குத் தயார் செய்வார்.
இவ்வாறு, கிறிஸ்து பிறப்பு விழாவில் பாலன் இயேசு அளிக்கும் அன்புப் பரிசின் சிறந்த அடையாளம் கிறிஸ்மஸ் தாத்தா. நாம் ஒருவருக்கு ஒருவர் அன்புப் பரிசுகள் வழங்க வேண்டும் என்பதே இத்தாத்தாவின் எண்ணமும் எதிர்பார்ப்பும்.
கிறிஸ்துமஸ் மரம்
கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக, கிறிஸ்துமஸ் மரம் மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த போனிபேஸ் என்றொருவர், கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந்ததாகச் சாடியும் எதிர்த்தும் வந்தார். ஊர் ஊராகச் சென்று இதற்காக பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றைமக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்டும் துளிர்த்து விடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.
ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக்கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக பார்க்கத் தொடங்கினர். போனிபேஸ் மீண்டும் அவ்வழியே சென்றபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழங்காலிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்தவ வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் 'உயிர்ப்பின் அடையாளமாக' இடம்பெறத் தொடங்கியது.
அன்று முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையில் முக்கிய அங்கமாக மாறி விட்டதாகவும், இதனால் ஜெர்மனியே கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் என்னும் சிறப்புப் பெருமையைப் பெறுவதாகவும் சொல்லப்படுகிறது. இவை ஒருபுறமிருக்க, 15-ம் நூற்றாண்டுகளில் டிசம்பர் 24-ம் நாளை ஆதாம், ஏவாள் தினமாகக் கொண்டாடும் வழக்கம் இருந்தது. விலக்கப்பட்ட மரத்தின் கனியைத் தின்றதால் பாவத்துக்குள் தள்ளப்பட்ட ஏதேன் காலத்தை நினைவுகூரும் விதமாக மரத்தை ஆப்பிள் போன்ற பழங்களால் அலங்கரித்து அந்த நாளைக் கொண்டாடி வந்தார்கள் என்றும், இதுவே பிறகு கிறிஸ்துமஸ் மரமாக மாறியது என்றும் தகவல்கள் உள்ளன.
அதோடு, கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது அந்த மரத்தின் சிறப்பம்சம். அதேபோல கிறிஸ்துமஸ் மரத்தின் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூய ஆவி எனும் இயேசுவின் மூன்று பரிமாணங்களைக் குறிப்பதாகவும், எனவே, இயேசு மனிதம் உருவான நாளை, மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடுவது அதிக அர்த்தமுடையது என்ற விளக்கங்களும் சொல்லப் படுகின்றன.
12-ம் நூற்றாண்டு காலங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் தலைகீழாகக் கட்டித் தொங்க விடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் ஆரம்ப காலத்தில் சுமார் நான்கடி உயரமான கிறிஸ்துமஸ் மரங்களையே மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
1521-ல் பிரான்ஸ் இளவரசி ஹெலீனாதனது திருமணத்துக்குப்பிறகு ஒரு கிறிஸ்துமஸ்மரத்தை பாரீஸ் நகருக்குகொண்டு வந்து விழா கொண்டாடியதே அந்நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துமஸ் மரம் நுழைந்ததன் முதல் நிகழ்வாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்துமஸ் மரத்தைமுதலில் வீடுகளுக்குள்ளும் அனுமதித்தவர்கள்.
இங்கிலாந்து அரசி விக்டோரியா அடிக்கடி ஜெர்மனி நாட்டுக்குப் பயணம் செய்வதுண்டு. அவருக்கு ஜெர்மனி நாட்டு இளவரசர் ஆல்பர்ட் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொண்ட இருவரும் இங்கிலாந்து திரும்பினார்கள். 1841-ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்துமஸ் மரத்தின் இங்கிலாந்து பிரவேசம் என்ற கதையும் உண்டு.
கிறிஸ்துமஸ் கேரல்ஸ்
கேரல் என்ற சொல் சாக்ஸன் மொழியில் இருந்து வருகிறது. இந்தச் சொல்லின் அர்த்தம், சுற்றி இருந்து கொண்டு ஆடிய வண்ணம் பாடுவது. நான்காம் நூற்றாண்டில் உரோமையில் கிறிஸ்துமஸ் பாடலானது முதன் முதலாக பாடப்பட்டது. கி.பி. 9 மற்றும் 10-ம் நூற்றாண்டுகளில் வடக்கு ஐரோப்பிய துறவிகளின் மடங்களில் கிறிஸ்துமஸ் பாடல் தொடங்கப்பட்டது. இதை ஒருங்கிணைத்தவர் பெர்னார்டு.
கி.பி.11-ஆம் நூற்றாண்டில் ஜெர்மன் நாட்டிலும் கிறிஸ்துமஸ் பாடல்களும், கீதங்களும் பாடப்பட்டன. கி.பி. 13-ம் நூற்றாண்டில் புனித பிரான்சிஸ் அசிசியார் குடில் அமைத்து கதாபாத்திரங்களை விளக்கி கூறும் நேரத்தில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடப்பட்டன. இதன் வாயிலாக பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகளில் அவரவர் மொழிகளில் கிறிஸ்துமஸ் பாடலானது பிரபலமடைந்தது. கி.பி. 1426-ம் ஆண்டு ஜாண் ஆட்லி அவர்களால் கிறிஸ்துமஸ் பாடலானது வீடுவீடாக சென்று பாடப்பட்டது.
கி.பி. 1816-ம் ஆண்டு அருட்தந்தை, ஜோசப்மோரால் எழுதப்பட்ட அமைதியான நள்ளிரவு (Silent Night) என்ற பாடல் மிகமிக பிரபலமடைந்து இன்று வரை பாடப்பட்டு வருகிறது.
அமைதியான நள்ளிரவு (ஒப்பில்லா திரு இரவு)
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு
மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
கிபி. 1857-ம் ஆண்டு 'ஜிங்கில் பெல்ஸ்' என்ற பாடலானது ஜேம்ஸ் பையர்பாயிண்ட் அவர்களால் இயற்றப்பட்டது. அதன்பின் 'ஜாய் டு த வேல்டு' (உலகிற்கு மகிழ்ச்சி) என்ற பாடல் இயற்றப்பட்டது. இவ்வாறு கிறிஸ்துமஸ் பாடல்களானது ஏராளமாக எழுதப்பட்டு பாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் விண்மீன்
கிறிஸ்மஸ் நட்சத்திரம் பெத்லகேமின் நட்சத்திரத்தை குறிக்கிறது, இது மூன்று ஞானிகளை குழந்தை இயேசுவை நோக்கி வழிநடத்தியது. நீண்ட காலத்திற்கு முன்பு நிறைவேற்றப்பட்ட ஒரு இறைவாக்கின் விண்ணக அடையாளமாகவும், மனித இனத்தின் ஒளிரும் எதிர்நோக்காகவும் உள்ளது.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹென்றி கோல் ஒரு அருங்காட்சியக இயக்குநராக இருந்தவர். மிகவும் பழைமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை வெளிக் கொணர்வதில் ஆர்வமுள்ளவரான இவர் தமது நண்பர்களுக்கு வரலாற்றின் சில சிறு குறிப்புகளை அனுப்பி வந்தார். அதன் விளைவாக 1843-ஆம் ஆண்டு தனது நண்பரும் ஓவியருமான ஜான் ஹார்ஸ்லி என்பவரிடம் வாழ்த்து அட்டைகளை அச்சிட்டு உருவாக்கித் தரும்படி கேட்டுக்கொண்டார். அவ்வாறு உருவானவையே வாழ்த்து மடல்கள்..! இவர் சுமார் 1000 வாழ்த்து மடல்களை அச்சிட்டு அனுப்பி வைத்தார். அதில் இயேசுவின் பிறப்பு, பெத்லகேம் விண்மீன், வானதூதர்கள் போன்றவை இடம் பெற்றன.
கிறிஸ்துமஸ் மர ஒளி விளக்குகள்
16ஆம் நூற்றாண்டில் மார்டின் லூதர் முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரத்தை ஒளி விளக்குகளால் அலங்கரித்தார். அவர் ஒரு நாள் காட்டில் நடந்து செல்கையில் மரங்களுக்கிடையே இருக்கும் இடைவெளிகள் வழியாக ஒளிரும் அழகான விண்மீன்களைப் பார்த்து நெகிழ்ந்து இரசித்ததாகவும், வீடு திரும்பியதும் தன் வீட்டில் மரம் அமைத்து அதை எரியும் மெகுதிரிகளால் அலங்கரித்ததாகவும் மரபு வழிக் கதை சொல்லப்படுகிறது.
கிறிஸ்துமஸ் மணிகள்
கிறிஸ்துமஸ் மணிகளுக்கும் அறிய வரலாறு உண்டு. கிறிஸ்தவ மரபிலும் புற இனத்தாரின் மரபிலும் தீய ஆவிகளை விரட்டுவதற்காக மணிகள் பயன்படுத்தப்பட்டன. கிறிஸ்து பிறப்பு போன்ற முக்கியமான நிகழ்வுகளைக் குறிக்கவும் அல்லது திருப்பலிக்கு நேரம் ஆயிற்று என்று ஆலயத்திற்குச் செல்வோருக்குத் தெரியப்படுத்தவும் ஆலய மணிகள் அடிக்கப்படுகின்றன. ஆனால் கிங்கினி மணிகள் கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனம் வருகிறது என்பதை சுட்டிக்காட்ட பயன்படுகின்றன.
கிறிஸ்துமஸ் கேன்டிகேன் (சர்க்கரை மிட்டாய்)
இதற்கு ஒரு மரபு வழி கதை உண்டு. நீண்ட கிறிஸ்துமஸ் திருப்பலிகளின் போது பாடகர் குழு சிறுவர்களை ஆக்கிரமிப்பதற்காக ஒரு பாடகர் குழு ஆசிரியரால் முதன்முதலில் அவை கண்டுபிடிக்கப்பட்டன, மேலும் இயேசுவை பின்பற்றுபவர்களுக்கு அவரை ஒரு நல்ல மேய்ப்பராக அடையாளப்படுத்த ஒரு மேய்ப்பனின் வளைந்த கோல் வடிவத்தில் இவை செய்யப்டுகின்றன.