Friday, 25 November 2022

திருவருகைக்கால தழைவளையத்தை ஆசிர்வதித்தல்

திருவருகைக்கால தழைவளையத்தை ஆசிர்வதித்தல்

அறிவுரை

இச்சடங்கு ஆலயத்தில் நிறைவேற்றப்படும் போது மக்களின் பார்வைக்கு ஏற்றவாறு மெழுகுதிரிகளின் அளவு பெரியதாக இருத்தல் நன்று.
அனைவரின் பார்வைக்கும் தெரியும் வண்ணம் தழைவளையத்தை ஒய்யாரமான இடத்தில் அமைத்தல் வேண்டும்.
வாசக மேடையையோ, பீடத்தையே, அருள்பணியாளர் அமரும் இருக்கையையோ மறைக்காமல் இது அலங்கரிக்கப்பட்டிருக்க வேண்டும்.


தொடக்க இறைவேண்டல்

முதல்: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே

பதில்: ஆமென்.

முதல்: ஆண்டவருடைய பெயராலே நமக்கு உதவி உண்டு.

பதில்: அவரே விண்ணையும் மண்ணையும் படைத்தவர்!

மன்றாடுவோமாக! 

உமது திருவார்த்தையால் அனைத்தையும் புனிதமாக்கிய இறைவா! உம்முடைய அருளை இத்தழைவளையத்தின் மீது பொழிந்தருளும். கிறிஸ்துவின் வருகைக்காக எங்கள் இதயங்களைத் தயார்படுத்தவும், உம்முடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டுமென எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். 

எல்:  ஆமென்.

(அருள்பணியாளர் தழைவளையத்தின் மீது புனித நீர் தெளிக்கிறார்.
தனியாக இறைவார்த்தை வழிபாட்டினுள் இதை நிகழ்த்தும் போது பின்வருவனவும் மேலே கொடுக்கப்பட்ட வழிமுறையோடு சேர்த்துக் கொள்ளப்படும்.)

அருள்வாக்கு:

எசாயா 9: 1-2, 5-6 (அ)
எசாயா 63: 16-17 ரூ 19 (அ)
எசாயா 64: 2-7


மன்றாடுவோமாக

எங்கள் ஆண்டவராகிய இறைவா! உம் திருமகன் இயேசு கிறிஸ்துவுக்காக உம்மைப் போற்றுகிறோம். அவர் இம்மானுவேல், அனைத்து மக்களின்; எதிர்நோக்கு அவரே,எங்களுக்குக் கற்பித்து வழிநடத்தும் ஞானமும் அவரே, எல்லா நாடுகளின் மீட்பரும் அவரே. ஆண்டவராகிய இறைவா! இந்த தழைவளையத்தின் மெழுகுதிரிகளை ஒளியேற்றும் போது எங்கள் மீது உமது ஆசீரைப் பொழிந்தருளும். இந்த தழைவளையமும் அதன் ஒளியும் மீட்பைக் கொண்டு வர கிறிஸ்து அளித்த வாக்குறுதியின் அடையாளமாக விளங்குவதாக. அவர் தாமதம் செய்யாமல் விரைவில் வருவாராக. எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.