ஈசாய் மரம்
திருவருகைக் கால தயாரிப்பு பக்தி முயற்சி
வாசகம்: எசாயா 11:1-2
ஈசாய் என்பவர் யார்?
ஈசாய் திருவிவிலியத்தில் மிகவும் முக்கியமானவராகவும் தாவீது அரசரின் தந்தையாகவும் அறியப்படுகிறார். இவரைப் பற்றி எசாயா இறைவாக்கினர் 'ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்ளூ அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும்' (எசாயா 11:1) என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இறைவாக்கு மீட்பராகிய இயேசு கிறிஸ்து வருகையைக் குறிப்பதாக கருதப்படுகிறது.
ஈசாய் மரத்தின் வரலாறு
இது ஈசாயின் அடிமரத்தைக் கொண்டு எசாயா கூறிய இறைவாக்கினை மையப்படுத்தி (எசாயா 11:1) உருவான பக்தி முயற்சியாகும். இது மத்திய காலங்களில் திருஅவையில் உருவானது எனக் கருதப்படுகிறது. இது முதலின் கலை வடிவங்களில் காணப்பட்டதாக தெரிகிறது. பெரும்பாலும் வண்ணக் கண்ணாடி சன்னல்களிலும், ஆடைகளிலும், கையெழுத்துப் பிரதிகளிலும் அடிமரத்தில் ஈசாய் நிற்க அதன் உயர்நத உச்சியில் இயேசு நிற்பதைப் போலவும் சித்தரிக்கப்பட்டன.
ஈசாய் மர ஆன்மிகம்
ஈசாய் மர பக்தி முயற்சி திருவருகைக் காலத்தில் ஏறெடுக்கப்படும் அர்த்தமுள்ள தயாரிப்பு நிகழ்வாகும். இது மீட்பு வரலாற்றை படிப்படியாக அறிந்து பொருளுள்ள வகையில் கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவிற்காக நம்மையே தயாரிக்க உதவுகிறது. இது இயேசுவின் வருகை வரலாற்றில் ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை உணர்த்துகிறது. இது பல நூற்றாண்டுகால இறைவாக்குகளும் மீட்புக்கான இறைவன் அளித்த உடன்படிக்கையும் இயேசுவில் நிறைவு பெற்றதை அடையாளப்படுத்துகிறது. இது ஆதாம் தொடங்கி இயேசு வரையுள்ள மத்தேயு கூறிய மூதாதையர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டும் மிகமுக்கியமான இன்னும் பல நபர்களை நினைவு கூரும் பக்தி முயற்சியாகும். இது ஒரு திருவருகைக்கால நாட்காட்டியாகவும் செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஈசாய் மரத்தில் ஒரு வட்ட வடிவிலான அடையாளங்கள் அவர்களை குறிக்கும் வகையில் தொங்கவிடப்படும். இதன் வழியாக திருஅவையோடு இணைந்து நாமும் மீட்பு வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற முன்னோர்களைக் குறித்து தியானித்து அவர்களைப் பற்றி அறிந்து அவர்களை பெற்றுக் கொண்ட அழைப்பினையும் அருளையும் நாமும் உணர முடிகிறது.
ஈசாய் மரம் தரும் செய்தி
கடவுள் நம்பிக்கைக்கு உரியவர், அவர் தான் அளித்த வாக்குறதிகளை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற மைய சிந்தனையை இந்த ஈசாய் மர பக்தி முயற்சி நமக்கு படிப்பினை ஆக்குகிறது. வரலாறு முழுவதிலும் மனத இனத்துக்கு மீட்பைக் கொணர கடவுள் அயராது செயல்படுகிறார் என்பதை இது உணர்த்துகிறது. இயேசுவின் பிறப்பினை படைப்பின் தொடக்கத்திலிருந்து வரையறுப்பதன் வழியாக பின்வரும் ஆன்மிகச் செய்திகள் நமக்குத் தரப்படுகின்றன.
1. எதிர்நோக்கு:
மீட்பரை அனுப்புவதாக கடவுள் கொடுத்த வாக்குறுதியை இயேசு நிறைவேற்றுகிறார் என்பதை ஈசாய் மரம் நமக்கு நினைவூட்டுகிறது. பழைய ஏற்பாட்டின் மக்கள் மெசியாவுக்காக எதிர்நோக்குடன் காத்திருந்தது போல், நம் வாழ்வில் கிறிஸ்துவின் பிரசன்னத்திற்காகவும் அவருடைய இரண்டாம் வருகைக்காகவும் எதிர்நோக்குடன் வாழ அழைக்கப்படுகிறோம்.
2. திருவிவிலியத்தின் ஒன்றிப்பு
இது பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் இணைக்கிறது. கிறிஸ்துவே அவ்விரண்டின் மையாக இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. எவ்வாறு திருவிவிலியத்தில் இடம்பெறும் ஒவ்வொரு மனிதரும் கிறிஸ்துவில் நிறைவுரும் இறைத்திருவுளத்தில் பங்கேற்கிறார்கள் என்பதையும் வெளிப்படுக்கிறது.
3. தயாரிப்பு
இயேசுவின் பிறப்பு விழாவிற்காக நம் இதயங்களைத் தயாரிக்க இந்த பக்தி முயற்சி நம்மை தூண்டுகிறது. ஏன் இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்பதை இது விளக்குகிறது.
