Friday, 25 November 2022

திருவருகைக்கால இளந்தளிர் வளையம்

 திருவருகைக்கால இளந்தளிர் வளையம்

வரலாறு

திருவருகைகக் காலத்தில் பச்சைநிற தழைகளைக் கொண்டு வளையம் அமைத்து அதில் நான்கு மெழுகுத்திரிகளைப் பொருத்தி ஒளியேற்றும் வழக்கம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மார்ட்டின் லூத்தரால்; திரு அவையில் ஏற்பட்ட பிரிவினை காலத்தில், ஜெர்மனி நாட்டில் தொடங்கப்பட்டது. ஜெர்மனியில் வாழும் கத்தோலிக்கர்கள் இவ்வழக்கத்தை 1920 இல் பின்பற்றினர். கிரேக்க உரோமானியர்களைப் போன்ற பல தெய்வ வழிபாடு கொண்ட மக்கள், குளிர்காலத்தின் இருளை மெழுகுத்திரி கொண்டு அகற்றி, இளவேனிற் பருவத்தின் குளிரையும் வெப்பத்தையும் தருமாறு, சூரியக் கடவுளிடம் வேண்டுவார்கள். காலச் சுழற்சியும், வாழ்வின் வசந்தமும் மீண்டும் வரும் என்பதை இம்மலர் வளையம் அவர்களுக்கு நினைவூட்டும். 

இந்தப் பின்புலத்தில், கிறிஸ்தவர்கள் பிற்காலத்தில் இம்மெழுகுதிரிகளுக்கு 'கிறிஸ்துவே உலகின் ஒளி' (யோவா 3:17-21) என்று பொருள்படும் நோக்கில் ஒரு புதிய, விவிலிய அர்த்தத்தை இதற்குக் கொடுத்தார்கள்.


திருவருகைக்கால தழைவளையத்தின் விளக்கம்

திருவருகைக்கால மலர் வளையத்தில் ஐந்து மெழுகுதிரிகள் வைக்கப்பட்டிருக்கும். நடுவில் ஒரு பெரிய மெழுகுதிரி வெள்ளை நிறத்தில் இருக்கும். அதைச் சுற்றி நான்கு மெழுகுதிரிகள் (மூன்று ஊதா நிறத்திலும் ஒன்று இளஞ்சிவப்பு நிறத்திலுமாக) பச்சை இலைகளால் சூழப்பட்டு இருப்பதையே திருவருகைக்கால மலர் வளையம் என்கிறோம். வட்ட வடிவமான இம்மலர்வளையம் தொடக்கமும், முடிவும் இல்லாத இறைவனையும், நிலை வாழ்வையும் குறிக்கின்றது. நம் மீட்பரான கடவுள், கிறிஸ்து இயேசுவில் புதிய, முடிவில்லா வாழ்வை நம்பிக்கையாளர்களுக்குத் தருகிறார் என்பதை, இப்பச்சை மலர் வளையம் நினைவூட்டுகின்றது. நான்கு மெழுகுதிரிகளும் நான்கு திருவருகைக்கால ஞாயிறுகளையும் குறிக்கின்றது. திருவருகைக் கால மலர் வளையத்தில் உள்ள நான்கு மெழுகுதிரிகள், திருவருகைக் காலத்தில் வரும் நான்கு வார கால உள்ளாந்த, ஆன்மிக தயாரிப்பைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒவ்வொரு மெழுகுதிரிகளும் 1000 ஆண்டுகளை பிரதிப்பலிக்கிறது. மேலும் நான்கு மெழுகுதிரிகளும், மனித சமுதாயம் 4000 ஆண்டுகளாக மெசியாவின் வருகையை நோக்கி காத்திருப்பதை அடையாளப்படுத்துகின்றன.

திருவருகைக் காலத்தின் முதலாம், இரண்டாம், மற்றும் நான்காம் வாரங்களின் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊதா நிற மெழுகுதிரிகள் ஒவ்வொன்றாக ஏற்றப்படும். இளஞ்சிவப்புநிற மெழுகுதிரி திருவருகைக்காலத்தின் மூன்றாவது ஞாயிறன்று ஏற்றப்படும். அந்த ஞாயிறு 'மகிழ்ச்சியின் ஞாயிறு' என அழைக்கப்படுகின்றது. நடுவில் இருக்கும் ஒரு பெரிய வெள்ளை நிற மெழுகுதிரி கிறிஸ்து பிறப்பு விழாவன்று ஏற்றப்படும். திருவழிபாட்டு நிறமான ஊதா (கருஞ்சிவப்பு) நிறம் செபம், தவம், தியாகம் ஆகியவற்றோடு கூடிய ஒறுத்தல் காலத்தைக் குறிக்கிறது. திருவருகைக் காலத்தை ஒரு 'குட்டி தவக்காலம்' என்றே அழைக்கலாம். ஏனெனில் பாவமாகிய இருளிலிருந்து, வாக்களிக்கப்பட்ட மீட்பை நோக்கி, அகில உலகமே கிறிஸ்துவின் பிறப்புக்காகக் காத்திருந்த காலத்தைக் இது குறிக்கிறது.

முதல் ஞாயிறன்று ஏற்றப்படும் மெழுகுத்திரி முதுபெரும் தந்தையர்களையும், இரண்டாவது திரி இயேசுவின் பிறப்பை முன்னறிவித்த எசாயா உள்ளிட்ட இறைவாக்கினர்களையும், மூன்றாம் திரி இயேசுவின் வருகைக்காக மக்களைத் தயாரித்த திருமுழுக்கு யோவானையும், நான்காம் திரி இயேசுவின் தாய் மரியாவையும் நினைவுபடுத்துகின்றன. இன்னும் ஒரு சில மலர்வளையங்களில் ஐந்தாவது வெள்ளை நிற 'கிறிஸ்து திரி' ஏற்றப்படுகிறது. இது தூய்மையை குறிக்கிறது. கிறிஸ்துமஸ் அன்று இது ஏற்றப்பட்டு நடுவில் வைக்கப்படுகிறது. 

இறைவன் நம்மேல் கொண்ட அன்புக்கு முடிவே இல்லை என்பதை வட்ட வடிவ அமைப்பும் இறைவனின் அன்பு நிரந்தரமானது என்பதை பச்சைநிற தழைகளும் நினைவுட்டுகின்றன. நம் மீட்பராம் இயேசுவின் வருகைக்காக இஸ்ரயேல் மக்கள் காத்திருந்ததை நினைவூட்டவும், உலகின் ஒளியாய் இயேசு வருவார் எனும் வாக்குறுதியைக் குறித்துக்காட்டவும், மலர் வளையத்தில் ஒளியேற்றும் இச்சடங்கு திருவருகைக் காலத்தில் நிறைவேற்றப்படுகிறது.

'காரிருள் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்'  (எசா 9:2)



துணை: 
1. அருள்பணி. ராக் சின்னப்பா, 'ஈசாய் மரம்,'
2. mycatholicbelief.blogspot.com