திருவருகைக் கால முதல் வார செவ்வாய்
நோவா
வாசகம்: தொடக்க நூல் 6:11-22, 9:8-13
சிந்தனை
நோவாவின் வாழ்வு நம்பிக்கை, கீழ்ப்படிதல், இறை உடன்படிக்கை ஆகியவற்றை மையமாக கொண்டு அமைந்தது. வன்முறையும், ஊழலும் தலைவிரித்து ஆடிய போது நோவா நேர்மையுள்ள மனிதராக தனித்து நின்று கடவுளோடு இணைந்திருந்தார். பெருவெள்ளம் வருமென கடவுள் எச்சரித்த போது, அவருடைய சொல்லுக்குக் கீழ்ப்படிந்து பேழையை கட்டினார். நோவாவின் மூலம் மனித இனத்தையும் பூமியின் உயிரினங்களையும் பாதுகாத்து, படைப்பின் மீது தான் கொண்ட அக்கறையை வெளிப்படுத்தினார். வெள்ளப்பெருக்கிற்குப் பின் இனி ஒரு போதும் நீரினால் உலகை அழிக்க மாட்டோன் என்று அவர் அளித்த வாக்குறுதியின் அடையாளமாக வானவில்லை கொடுத்தார். இக்கதை இயேசுவை முன்வைத்து, அவர் மூலம் பெறவிருக்கும் இறை-மனித நல்லிணக்கத்துக்கான புதிய நிலையான உடன்படிக்கையை சுட்டிக்காட்டுகின்றது.
கடவுள் மீது நோவா கொண்டிருந்த இறைப்பற்றும் இறைநம்பிக்கையும், நாம் கடவுளுடைய திருவுளத்தை முழுமையாக புரிந்து கொள்ளாவிட்டாலும் கீழ்ப்படிதலுடன் வாழ நமக்கு சவால் விடுக்கிறது. எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையாக இருந்தாலும், கடவுளின் இரக்கம் பெரியது என்றும், அவருடைய வாக்குறுதிகள் அசைக்க முடியாதவை என்பதையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.
செபம்
அன்பின் இறைவா! நம்பிக்கையும் கீழ்ப்படிதலும் நிறைந்த நோவாவின் எடுத்துக்காட்டான வாழ்வுக்காக நன்றி. உம்முடைய வாக்குறுதிகளின் மீது நம்பிக்கைக் கொண்டு எங்களின் கடினமான சூழ்நிலையிலும் உம்மோடு பயணிக்க உதவியருளும். இதனால் வானவில்லில் அடையாளப்படுத்தப்பட்டு கிறிஸ்துவில் நிறைவெய்திய உம்முடைய இரக்கத்தையும் அன்பையும் என்றும் நினைவில் கொள்வோமாக. ஆமென்.
