Monday, 5 December 2022

ஈசாய் மரம் - திருவருகைக்கால இரண்டாம் வார திங்கள்

 திருவருகைக்கால இரண்டாம் வார திங்கள்

செம்மறி ஆடு

வாசகம்: விடுதலைப் பயணம் 12:1 – 14:31

சிந்தனை:

திருவிவிலியம் முழுவதுமே செம்மறி ஆடானது மீட்பின் சின்னமாகவும் தியாகத்தின் சின்னமாகவும் திகழ்கிறது. பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேலர்கள் பழுதற்ற செம்மறி ஆட்டினை பலியிட்டு அதன் இரத்தத்தை தங்களுடைய இல்ல வாயிலின் சட்டங்களில் பூசினார்கள். இச்செயல் அவர்களை எகிப்தின் கடைசி வாதையிலிருந்து விடுவித்து அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழிவகுத்தது. ஆட்டுக்குட்டியின் இரத்தம் அவர்களைப் பாதுகாத்த அந்த நிகழ்வு கடவுளின் மீட்பையும் இரக்கத்தையும் குறிக்கிறது. 

புதிய ஏற்பாட்டில், உலகின் பாவங்களைப் போக்கும் இறைவனின் செம்மறியாக இயேசு வெளிப்படுகிறார் (யோவான் 1:29). இறப்பைத் தரும் பாவத்தின் அடிமைத்தளையிலிருந்து மனிதகுலத்தை காப்பாற்ற சிலுவையில் தனது உயிரைக் கொடுத்து  பாஸ்கா ஆட்டுக்குட்டியானார். அவருடைய தியாகத்தின் மூலம், நமக்கு மன்னிப்பும் புதிய வாழ்வும் பரிசாக வழங்கப்பட்டது.

ஆட்டுக்குட்டியானது கடவுளின் அன்பையும், தியாகத்தையும், அவர் அருளும் மீட்பையும் நமக்கு நினைவூட்டுகிறது. நமக்காக உயிரைக் கொடுக்க மனமுவந்த இயேசுவைப் பற்றி சிந்திக்கவும் அவர் காட்டிய இரக்கத்திற்காகவும், அருளுக்காகவும் நன்றியோடு வாழவும் நம்மை அழைக்கிறது.


செபம்: 

விண்ணகத் தந்தையே, எங்கள் பாவங்களைப் போக்கும் செம்மறியாக இயேசுவை அனுப்பியதற்காக உமக்கு நன்றி. அவருடைய தியாகத்தை நினைத்து, உமது காட்டிய இரக்கத்திற்காக அன்புடனும் நன்றியுடனும் எங்கள் வாழ்க்கையை வாழ எங்களுக்கு உதவு புரியும். ஆமென்.