Sunday, 4 December 2022

ஈசாய் மரம் - திருவருகைக்கால இரண்டாம் ஞாயிறு

 திருவருகைக்கால இரண்டாம் ஞாயிறு

மோசே

வாசகம்: விடுதலைப் பயணம் 20:1-17

சிந்தனை:

மோசே பழைய ஏற்பாட்டின் மிக முக்கியமான நபர்களில் ஒருவர். எகிப்தியரின் அடிமைத்தளையிலிருந்து இஸ்ரயேலர்களை வழிநடத்த கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவருடைய வாழ்க்கை கடவுளின் ஆற்றலையும், வழிநடத்துதலையும், அவரது மக்களுக்கு அவர் அளித்த விடுதலையையும் நீதியையும் எடுத்தியம்புகிறது. கடவுள் எரியும் புதர் வழியாக மோசேயிடம் பேசியபோது, இஸ்ரயேலரை மீட்பதற்கான தனது திட்டத்தை வெளிப்படுத்தினார். இது அவர் தம்முடைய மக்களின் கூக்குரலைக் கேட்டு அவர்களை விடுவிப்பதற்காகச் செயல்படுகிறார் என்பதை வெளிக்காட்டுகிறது.

மோசே கடவுளின் அழைப்புக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்து, பார்வோனை எதிர்கொண்டு, செங்கடலைப் பிரித்து, இஸ்ரயேலரை பாலை நிலத்தில் வழிநடத்தினார். சினாய் மலையில், கடவுள் மோசேக்கு பத்துக் கட்டளைகளைக் கொடுத்தார். இது அவருடைய மக்கள் எவ்வாறு அவருடனும் ஒருவருக்கொருவர் உறவுடனும் வாழ வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதலை வழங்கியது. மோசேயின் தலைமைத்துவமும் உடன்படிக்கையும் அவர் கொண்டிருந்த கீழ்ப்படிதல், நம்பிக்கை, தம் மக்கள்மீது கடவுள் கொண்டிருந்த அன்பின் முக்கியத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றன.

பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவித்து புதிய வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்லும் இறுதி மீட்பராகிய இயேசுவை மோசே முன்னிறுத்துகிறார். மோசே பழைய உடன்படிக்கைக்கு இணைப்பாளராய் செயல்பட்டது போல், நிலையான புதிய உடன்படிக்கையை இயேசு நமக்கு கொண்டுவருகிறார்.


செபம்:

விண்ணகத் தந்தையே இறைவா! உமது அழைப்பை ஏற்று உமது வல்லமையை நம்பிய மோசேயின் முன்மாதிரியான வாழ்வுக்காக நன்றி. உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து உமது விடுதலையில் நம்பிக்கை கொள்ள எங்களுக்கு உதவுயருளும். உமது மக்களை விடுதலைக்கு அழைத்துச் சென்றது போல், உமது அருளால் எங்களை வழிநடத்தும். ஆமென்.