Tuesday, 6 December 2022

ஈசாய் மரம் - திருவருகைக்கால இரண்டாம் வார செவ்வாய்

 திருவருகைக்கால இரண்டாம் வார செவ்வாய்

யோசுவா

வாசகம்: யோசுவா 1: 1-11, 6:1-20

சிந்தனை:

மோசேயின் இறப்பிற்குப் பிறகு, இஸ்ரயேலரை வாக்களித்த நாட்டிற்கு அழைத்துச் செல்ல, யோசுவா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பெயருக்கு 'ஆண்டவர் காக்கின்றார்' என்பது பொருள். கடவுளின் வாக்குறுதிகளையும் வழிகாட்டுதலையும் நம்பி அவர் மிகுந்த நம்பிக்கையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தினார். இஸ்ரயேலர்கள் கடவுளின் கட்டளைகளைப் பின்பற்றி எரிக்கோ நகரத்தைச் சுற்றி அணிவகுத்து நடந்து எக்காளங்களை ஊதிய போது அதன் மதில் சுவர்கள் இடிந்து விழுந்த அந்நிகழ்வு யோசுவாவினுடைய தலைமைத்துவத்தின் மிகவும் பிரபலமான செயல்களில் ஒன்றாகும். 

கீழ்ப்படிதல், நம்பிக்கை மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை யோசுவாவின் தலைமை நமக்குக் கற்பிக்கிறது. மனித பலத்தால் அல்ல, மாறாக கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைப்பதன் மூலமே வெற்றி கிடைக்கும் என்பதை அவர் எடுத்துகாட்டினார். யோசுவா இயேசுவை அடையாளப்படுத்துகிறார். அவருடைய பெயரும் எபிரேய மொழியில் (யோசுவா போன்று) யேய்சுவா என்பதாகும். யோசுவா கடவுளுடைய மக்களை மண்ணுலகின் வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்றது போல, இயேசு நம்மை விண்ணரசின் நிலையான வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் செல்கிறார்.


செபம்: 

இறைவா, யோசுவா நீர் அளித்த நம்பிக்கைக்காகவும் ஆற்றலுக்காகவும் உமக்கு நன்றி கூறுகின்றோம். ஆண்டவரே, யோசுவாவின் தைரியத்திற்கும் விசுவாசத்திற்கும் நன்றி. எங்கள் வாழ்வில் நாங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போது உமது வழிகாட்டுதலிலும் வலிமையிலும் நம்பிக்கை கொள்ள எங்களுக்கு உதவு புரியும். ஆமென்.